பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத் -
ஐபிஎல் தொடரின் 42-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டெல்லி டேர்டெவில்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டெல்லி டேர்டெவில்ஸ் அணி நாணய சுழற்சியில் வென்று துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
டெல்லி அணியின் பிரித்வி ஷா, ஜேசன் ராய் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 9 ஓட்டங்களிலும், ஜேசன் ராய் 11 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அணித்தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். இதனால் டெல்லி டேர்டெவில்ஸ் 43 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.
4-வது வீரராக களம் இறங்கிய ரிஷப் பந்த் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருக்கு துணையாக ஹர்ஷல் பட்டேல் எதிர்முனையில் நிற்க ரிஷப் பந்த் வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
15-வது ஓவரை ஷாகிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி ரிஷப் பந்த் அரைசதம் அடித்தார்.
36 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், அதன்பின் விஸ்வரூபம் எடுத்தார். ரிஷப் பந்த் அரைசதம் அடித்தபோது டெல்லி 14.1 ஓவரில் 104 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரி பறக்க விட்டார்.
இதனால் 18 ஓட்டங்கள் கிடைத்தது. அத்துடன் 97 ஓட்டங்கள் அடித்தார். 19-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பவுண்டரி அடித்து ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை 56 பந்தில் பூர்த்தி செய்தார்.
கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்ஸ் விளாசி 26 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் குவித்தது.
இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.
ஹர்சல் பட்டேல்(24), மேக்ஸ்வெல்(9), ரிஷப் பந்த் 63 பந்தில் 15 பவுண்டரி, 7 சிக்சரடன் 128 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 188 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ், ஷிகர் தவான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஹேல்ஸ் 14 ஓட்டங்களில் அவுட்டானார்.
அடுத்து, அணித்தலைவர் வில்லியம்சன் இறங்கினார். தவானும், வில்லியம்சனும் இணைந்து டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.
இறுதியில், ஐதராபாத் அணி 18.5 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தவான் 50 பந்தில் 92 ஓட்டங்களுடனும், வில்லியம்சன் 53 பந்தில் 83 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஐதராபாத் அணி டெல்லி அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது.
பிளே ஆப் சுற்றுக்குள் முதல் அணியாக நுழைந்தது ஐதராபாத் -
Reviewed by Author
on
May 11, 2018
Rating:
No comments:
Post a Comment