பிரபல விஞ்ஞானி கருணைக் கொலை!
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த தாவரவியல் அறிஞர் டேவிட் குடால்.
104 வயது ஆனதால் உடல் நலம் குன்றி வருவதால் இனி வாழ விரும்பவில்லை என்று கூறி மருத்துவர்கள் உதவியால் வாழ்வை முடித்துக்கொள்ள விரும்பினார் அவர்.
அதற்கு தற்போது அவுஸ்திரேலியாவில் சட்டப்படி அனுமதி இல்லாததால், தனது வாழ்வை முடித்துக் கொள்வதற்காக சுவிட்சர்லாந்துக்கு பயணித்தார் டேவிட்.
இன்று காலை 11.30 மணியளவில் அவரது விருப்பப்படியே பீத்தோவனின் இசை ஒலிக்க தனது இறுதி மூச்சை விட்டார் டேவிட்.
அவரது குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர் ஒருவரும் உடனிருக்க, அவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு கண்களை மூடினார் டேவிட்.
அவர் இறப்பதற்குமுன் கடைசியாக ”மிக நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறதே” என்று அவர் கூறியதாக அவருடன் அவரது கடைசி நிமிடங்களில் உடனிருந்த மருத்துவர் Philip Nitschke தெரிவித்தார்.
உயிரை பிரியச் செய்யும் மருந்து, குழாய் மூலம் அவரது உடலில் பொருத்தப்பட்டு அதை இயக்கும் விசை அவரது கையிலேயே கொடுக்கப்பட்டது.
அதை இயக்குவதற்குமுன் அவர் சுய நினைவுடன் இருக்கிறார் என்பதை உறுதி செய்வதற்காக அவரிடம் வரிசையாக பல கேள்விகள் கேட்கப்பட்டன.
அப்போதுதான் அவர் “இதற்கு இவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறதே” என்று கூறினாராம்.
அவரது பெயர், அவரது பிறந்த திகதி, அவர் இந்த மருத்துவமனைக்கு வந்ததற்கான காரணம் ஆகியவை குறித்த கேள்விகளுக்கு சரியாக பதில் கூறிய டேவிட், இனி என்ன நடக்கும் என்று கேட்டதற்கு, “எனது இதயம் நின்று விடும் என்று நம்புகிறேன்” என்று கூறினாராம்.
மருந்தை உடலில் செலுத்துவதற்கான விசையை அவர் அழுத்தியதும் அவருக்கு பிடித்த பீத்தோவன் இசை இசைக்கப்பட்டது, அவர் கண்களை மூடினார், இரண்டு நிமிடங்களுக்குள் அவரது உயிர் பிரிந்தது.
சுவிட்சர்லாந்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டு அவரது அஸ்தி அவுஸ்திரேலியாவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
பிரபல விஞ்ஞானி கருணைக் கொலை!
Reviewed by Author
on
May 10, 2018
Rating:
No comments:
Post a Comment