தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை!----S.வியாளேந்திரன்
தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை என்பதே உண்மையானதாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட நரிப்புல்தோட்டத்தில் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
தற்போது குளங்கள், வாவிகள், நிலம் என்பன பறிபோகின்றன. கோயில்கள் உடைக்கப்படுகின்றன. மட்டக்களப்பில் உள்ள சிலர் தமக்கு எந்த பிரச்சினையும் இல்லை என கருதுகின்றனர்.
ஆனால் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சினைகள் நாளை இங்கும் வரலாம். இன்று தாந்தாமலைக்கே பிரச்சினை வந்துவிட்டது.
எங்களுக்கு அபிவிருத்திகள் தேவை. அதனை நாங்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. இந்த 3 வருடத்தில் தமிழ் பகுதிகளில் இலங்கை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் செய்யாத அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம்.
எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு இந்த அபிவிருத்தியை நாங்கள் செய்திருக்கின்றோம். அபிவிருத்தியுடன் சேர்ந்த உரிமை என்ற விடயமும் சமாந்தரமாக பயணிக்க வேண்டும்.
அதனை சிந்திக்கும் சமூகம் என்ற நிலையில் இருந்து நாங்கள் இறங்கி சென்று கொண்டிருக்கின்றோம். எமது சமூக, பாரம்பரிய, கலை, கலாச்சார, பண்பாடுகளை மறந்து செல்லும் சமூகமாக தமிழ் சமூகம் மாற்றமடைந்து வருகின்றது.
அன்று தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட போது அதற்கு எதிராக தமிழ் தலைவர்கள் போராடினார்கள். அந்த போராட்டத்தினை அன்று இருந்த சில தமிழ் அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர்.
ஆனால் அன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டமே இன்று தமிழ் மொழிக்கு ஒரு அந்தஸ்தினை பெற்றுக்கொடுத்துள்ளது. ஆயுத போராட்டத்தினையும் சிலர் பூச்சியத்தில் தொடங்கி பூச்சியத்தில் முடிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் இன்று தமிழர்களின் போராட்டம் சர்வதேச ரீதியாக பேசப்படுவதற்கு ஆயுத போராட்டம் தான் காரணமாகும். தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை என்பதே உண்மையானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்களின் எந்த போராட்டமும் தோல்வியடையவில்லை!----S.வியாளேந்திரன்
Reviewed by Author
on
September 24, 2018
Rating:
Reviewed by Author
on
September 24, 2018
Rating:


No comments:
Post a Comment