முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு! தீர்ப்பு திகதி அறிவிப்பு -
வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக தக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு எதிராக தாக்கல் செய்துள்ள அடிப்படை எதிர்ப்பு தொடர்பான உத்தரவு எதிர்வரும் 10ம் திகதி அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான குமுதினி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியமை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவினை நடைமுறைப்படுத்தாது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணசபையின் அமைச்சராக இருந்து டெனீஸ்வரன் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததைதொடர்ந்து அவரை, அமைச்சு பதவியிலிருந்து நீக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் ´நீதிமன்றத்தை அவமதித்ததாக´ தெரிவித்து பி.டெனிஸ்வரன் மற்றொரு மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி பி. டெனிஸ்வரனால் தொடுக்கப்பட்டுள்ள மனுவே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மாகாண முதலமைச்சர் என்ற வகையில், முதலமைச்சர் தமக்குள்ள அதிகாரத்திற்கிணங்க முன்னாள் அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப்பதவியில் இருந்து நீக்கி, வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டதாக சீ.வி.விக்னேஷ்வரன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கணகேஸ்வரன் நீதிமன்றில் தெரிவித்தார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தலை மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைநிறுத்தியிருந்தாலும், முறைப்பாட்டாளரான பா.டெனிஸ்வரனை மீண்டும் அமைச்சுப்பதவிக்கு நியமிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லையெனவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடர முடியாது என ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.கணகேஸ்வரன் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு! தீர்ப்பு திகதி அறிவிப்பு -
Reviewed by Author
on
October 17, 2018
Rating:

No comments:
Post a Comment