உலகையே திரும்பி பார்க்க வைத்த யேமன் சிறுமி மரணமடைந்தார் -
வடக்கு யேமனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பஞ்சத்தால் தோற்கடிக்கப்பட்ட சிறுமி அமல் சலனமற்று கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்கலங்கியுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்காவின் முக்கிய நாளேடு ஒன்றில் பட்டினியால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி அமல் ஹுசைனின் பரிதாபமான புகைப்படம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
குறித்த புகைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தால் பலர் சிறுமி அமலின் குடும்பத்தாருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்ததுடன், சிறுமியின் உடல் நலம் தேறியுள்ளதா என அக்கறையுடன் விசாரிக்கவும் செய்துள்ளனர்.

வியாழனன்று சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனையில் இருந்து 4 மைல்கள் தொலைவில் உள்ள அகதிகள் முகாமில் வைத்து சிறுமி மரணமடைந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அமலின் மரணம் தம்மை மிகவும் உலுக்கியதாக கூறும் தாயார் மரியம் அலி, எஞ்சிய குழந்தைகள் தொடர்பில் தமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யேமன் நாட்டில் நீடிக்கும் உள்நாட்டுக் கிளர்ச்சி மற்றும் சவுதி அரேபியா தலைமையிலான வான்வழி தாக்குதல் உள்ளிட்டவையால் சுமார் 8 மில்லியன் மக்கள் போதிய உணவின்றி தவிப்பதாகவும்,
இது மிக விரைவில் 14 மில்லியன் என அதிகரிக்கும் எனவும் ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது யேமன் நாட்டின் சரிபாதி மக்கள் தொகையாகும். சவுதி தாக்குதலுக்கு அஞ்சியே சிறுமி அமலின் குடும்பம் உள்ளிட்ட பலர் தங்கள் குடியிருப்புகளை விட்டு அகதிகள் முகாம்களில் தங்குகின்றனர்.
அரேபிய மொழியில் அமல் என்றால் நம்பிக்கை என பொருள்படும். சிறுமியின் புகைப்படம் வெளியானதும் உலக நாடுகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கும் என பலரும் நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
ஆனால் இதுவரை சவுதி மீதும் யேமன் மீதும் உலக நாடுகளின் பார்வை திரும்பவில்லை என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உலகையே திரும்பி பார்க்க வைத்த யேமன் சிறுமி மரணமடைந்தார் -
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment