அடங்கா குட்டியின் அனுபவ பாடம்
அடங்கா குட்டியின் அனுபவ பாடம்...
பாசம் சந்தோசமென்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அது மிருகங்களுக்கம் பொருந்தும். அது ஒரு அடர்ந்த காடு…. அங்கு பலவிதமான மிருகங்கள் தனது குட்டிகளோடு சந்தோசமாக வாழ்ந்து வந்தன. அதே காட்டில் ஒரு யானையும் தனது இரு குட்டிகளோடு சந்தோசமாக வாழ்ந்து வந்தது. இந்த தாய் யானையானது தனது இரு குட்டிகளையும் மிகவும் பாதுகாப்பாகவும் பாசமாகவும் வளர்த்து வந்தது.
அந்த இரு குட்டிகளும் ஒன்றோடு ஒன்று எதிர்மறையானது. ஒரு குட்டியானது தனது தாய் சொல்லும் சொல்லை தட்டாது இருந்தது. மற்றைய குட்டியானது தாய் சொல்லும் பேச்சை கேட்காது தான் நினைப்பதை மட்டுமே செய்து வந்தது. இருந்தும் அந்த தாய் யானை இரு குட்டிகளையும் ஒரே அளவு பாசத்தை காட்டி வளர்த்து வந்தது.
அந்த காட்டிற்கு அருகாமையில் ஒரு கரும்புத்தோட்டம் இருந்தது. ஆனால் அந்த தோட்டத்திற்கு காட்டிலிருந்து ஒரு மிருகங்களும் செல்வதில்லை. காரணம் அந்தத்தோட்டத்தை காவல் காக்கும் காவலாளிகள் அங்கு வரும் மிருகங்களை பிடித்து கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்வார்கள்.
அந்த சுட்டியான யானைக்குட்டிக்கு அந்த கரும்புத் தோட்டத்திற்கு செல்வதற்கு வெகு நாளாக ஆசை இருந்தது. ஒரு நாள் தனது ஆசையை தனது தாயிடம் சொன்னது. ஆனால் தாய் யானை அங்கு செல்வது ஆபத்து அங்கு செல்லக்கூடாது என்று அறிவுரை கூறியது. தாய் யானை சென்னதை அசட்டையோடு கேட்டுக்கொண்டிருந்த அந்த குறும்புக் குட்டியானை அந்த கரும்புத்தோட்டத்துக்கு செல்வதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தது. அது எதிர்பார்த்ததுபோல சந்தர்ப்பமும் அமைந்தது.
கரும்புத்தோட்டத்துக்குள் புகுந்த குறும்புக்காற குட்டியானை கரும்புகளை பிடுங்கி தின்றது மட்டும் இல்லாது கரும்புத்தோட்டத்தை சேதப்படுத்தியது. இதை அவதானித்த கரும்புத்தோட்ட காவலாளிகள் கூரிய ஆயுதங்களை எடுத்துக்கொண்டு குட்டியானையை பிடிக்க முற்பட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அந்தக் குட்டியானை பதட்டத்தோடு கரும்புத்தோட்டத்தை விட்டு தனது தாய் இருக்கும் திசைநோக்கி ஓடுவதாக நினைத்து வேறு திசைநோக்கி ஓடியது.
தோட்டக்கரர்களும் விடுவதாக இல்லை. புதர்களுக்குள்ளே ஒளிந்து ஓடிய அந்தக்குட்டி யானை எதிர்பாரத விதமாய் பாழடைந்த கிணத்தினுள்ளே விழுந்து விட்டது. கிணத்துக்குள் விழுந்த சில நிமிடங்கள் அது சத்தமே…. போடவில்லை காரணம் தோட்டக்காரர்களிடம் அகப்பட்டு விடுவோம். என்று எண்ணி. அங்குமிங்கும் தேடிய தோட்டக்காரர்கள் எங்கு தேடியும் யானைக்குட்டியை காணாததினால் மீண்டும் தோட்டத்துக்கே திரும்பிவிட்டார்கள்.
வெகு நேரமாக தனது குட்டியை காணாத தாய் யானை அந்தக் காடு முழுவதும் தேடியலைந்தது. பாழடைந்த கிணற்றுக்குள் இருந்து வெளியே வரமுடியாது தவித்த குட்டியானையின் குரல் கேட்டு ஓடிய தாய் அதன் நிலை கண்டு பதறிப்போய்…..... பல்வேறு முயற்சிக்குப்பின் தன் குட்டியை மீட்டெடுத்து தன் இருப்பிடம் அரவணைத்துக்கொண்டே போனது. போகும் வழியில் தன் தவறை எண்ணி கண்ணீர் விட்டு அழுது அன்னையிடம் மன்னிப்புக்கோரியது. தாய் சொல்லைத்தட்டினால் துன்பம் வரும் எனும் பாடத்தை கற்றுக்கொண்டது.
சிறுவர்கதையாக்கம்-பி.பெனில்-
அடங்கா குட்டியின் அனுபவ பாடம்
Reviewed by Author
on
December 23, 2018
Rating:

No comments:
Post a Comment