Brexit மூன்றாவது முறையாக தெரேசா மேவுக்கு பின்னடைவு! -
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்சிற் நடவடிக்கையின் காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
ஆனால் பிரெக்சிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே மேற்கொண்ட ஒப்பந்தத்தை 2 முறை பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் நிராகரித்துவிட்டனர்.
மேலும், ஒப்பந்தம் இல்லா பிரெக்சிற் பிரேரணையும் 2 முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், பிரெக்சிற் நடவடிக்கையை தாமதப்படுத்துவதற்கான தீர்மானம் சமீபத்தில் பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறியது.
இதனால் பிரெக்சிற் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென தெரேசா மே ஐரோப்பிய கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்தார்.
இதனை ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர் டொனால்டு டஸ்க் ஏற்றுக் கொண்டார்.
பிரெக்சிற் ஒப்பந்தத்தை பிரித்தானிய பாராளுமன்றம் ஆதரித்தால் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற மே மாதம் 22 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்படுகிறது.
மாறாக அந்த ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் ஏப்ரல் 12 ஆம் திகதிக்குள் பிரித்தானியா வெளியேறியாக வேண்டும் என டொனால்டு டஸ்க் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், பிரெக்சிற் தொடர்பாக 8 மாற்று உடன்படிக்கைகளை எம்பிக்கள் முன்வைத்தனர்.
ஆனால் இந்த உடன்படிக்கைகளுக்கும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கவில்லை.
அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரதமர் தெரேசா மே செய்துகொண்ட பிரெக்சிற் உடன்படிக்கை தொடர்பாக மூன்றாவது முறையாக பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பும் தோல்வியில் முடிந்துள்ளது.
இன்று பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்பட்ட உடன்படிக்கைக்கு எதிராக 344 எம்.பி.க்களும், ஆதரவாக 286 எம்.பி.க்களும் வாக்களித்துள்ளனர்.
மூன்றாவது முறையாகவும் இந்த ஒப்பந்தம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில்,
ஏப்ரல் 10 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் அவசர கூட்டத்துக்கு டொனால்ட் டஸ்க் அழைப்பு விடுத்துள்ளார்.
Brexit மூன்றாவது முறையாக தெரேசா மேவுக்கு பின்னடைவு! -
Reviewed by Author
on
March 30, 2019
Rating:

No comments:
Post a Comment