காணி ஆவணங்களுடன் கிளிநாச்சி நீதிமன்றில் ஆஜராகிய 101 குடும்பங்கள் -
கரந்தாய் பிரதேசத்தில் மக்கள் தமக்கு சொந்தமானதென உரிமைகோரும் காணியில் கடநத 16ம் திகதி அதிகாலை அத்துமீறி குடியேறினர்.
குறித்த பகுதியில் தலா ஒரு ஏக்கர் வீதம் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் 101 பேருக்கு வழங்கப்பட்ட காணியை தெங்கு அபிவிருத்தி சபை தமது காணி என இதுவரை உரிமைகோரி வந்தது.
இந்த நிலையில் குறித் காணிக்கான ஆவணங்களுடன் மக்கள் குடியேறுவதற்கு தெங்கு அபிவிருத்தி சபை அனுமதிக்காது தெங்கு பயிர்களை பயிரிட்டிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த காணி விடயம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் பலமுறை பேசப்பட்ட போதிலும் எதுவித முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
இந்த நிலையில், யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதற்கமைய குறித்த காணியை உரிமை கோருவதற்கு தெங்கு அபிவிருத்தி சபைக்கு எவ்வித ஆவணங்களும் இல்லை எனவும், அதனை உரிமை கோருவதற்கு காணி சீரமைப்பு ஆணைக்குழுவிற்கே உள்ளது எனவும், மக்களிற்கு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணியை அவர்களே வழங்க மனித உரிமைகள் ஆணைக்குழு சிபாரிசு வழங்கியிருந்துது.
இந்த நிலையில் குறித்த காணி விடயம் இழுபறி நிலையில் இருந்து வந்த நிலையில், கடந்த 16ம் திகதிமுதல் மக்கள் குறித்த காணியில் கொட்டகைகளை அமைத்து குடியிருந்து வருகின்றனர். குறித்த பகுதிக்கு பா.மன்ற உறுப்பினர் எஸ் சிறீதரனும் வருகை தந்திருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் தலைமையில் அன்றைய தினம் 10 மணியளவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பா. ம உறுப்பினர் சிறீதரன், கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரத்நாயக்க, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ், காணி சீர்திருத்த ஆணைக்குழு, தெங்கு பயிர்ச்செய்கை சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது குறித்த காணி விடயம் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் சிபாரிசுகள் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் கனகராஜ் தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
குறித் காணியை உரிமை கோருவதற்கு தெங்கு அபிவிருத்தி சபைக்கு அதிகாரம் இல்லை எனவும், அது மக்களிற்கே வழங்கப்பட வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பா.ம உறுப்பினர் சிறீதரன்,
குறி்த காணி மக்களுக்குரியது. மக்கள் குறித்த பகுதியில் குடியேறியுள்ளனர். அவர்கள் தமது காணியில் குடியேறியுள்ளனர்.
தெங்கு அபிவிருத்தி சபையினர் குறித்த காணி தமது என தெரிவித்தால் சட்ட ரீதியாக அணுகுமாறு அவர் குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பில் மக்களை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் வருகை தந்திருந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிடுகையில்,
நாம் நேரடியாக குறித்த காணி விடயம் தொடர்பில் தலையீடு செய்யமாட்டோம். சமாதானத்திற்கு இடையூறு இல்லாத வகையில் அரச திணைக்களங்கள் தமது நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இதன்போது தெரிவித்தார்.
காணி உரிமம் தொடர்பில் பொலிசார் எவ்வித நடவடிக்கையையும் கையாளாது எனவும், சமாதானத்திற்கு இடையூறு ஏற்படாதவாறு பொலிசார் பார்த்துக்கொள்வர் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நிலையில் குறித்த காணியில் குடியேறிய மக்கள் துப்பரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த 17.04.2019 அன்று குறித்த காணியை விட்டு அத்துமீறி குடியேறியோரை வெளியேறுமாறு தெரிவித்து தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் கிளிநாச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
அதற்கமைய குறித்த காணியைவிட்டு வெளியேறுமாறும், காணி தொடர்பான ஆவணங்களுடன் இன்று (30ம் திகதி) மன்றில் சமூகமளிக்குமாறும் மன்று உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்தும் மக்கள் அங்கு குடியிருந்தனர்.
18.04.2019ம் திகதியன்று குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் கிளிநொச்சி கரந்தாய் பகுதியில் நீதிமன்ற உத்தரவினை மீறி காணிகளுக்குள் இருக்கும் மக்களுடன் நீண்டநேம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மன்றின் கட்டளைக்கு மதிப்பளித்து மக்கள் குறித் காணியை விட்டு வெளியேறியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று குறித்த காணி தொடர்பான வழக்கிற்காக 101 குடும்பங்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் தமது ஆவணங்களுடன் சமூகமளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
காணி ஆவணங்களுடன் கிளிநாச்சி நீதிமன்றில் ஆஜராகிய 101 குடும்பங்கள் -
Reviewed by Author
on
May 01, 2019
Rating:

No comments:
Post a Comment