வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 90,000 பேர்: நோயை பரப்பும் அபாயம் இருப்பதாக அமைச்சர் கடிதம் -
COVID-19 வைரஸ் தாக்குதலால் இந்தியா முழுவதும் 562 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர். வைரஸானது தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு நாடு தழுவிய மூடலை அறிவித்தார்.
இந்த நிலையில் பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங் சித்து, வெளிநாட்டில் வசித்த 90,000 பேர் பஞ்சாபில் வந்து இறங்கியிருப்பதால் கொரோனா பரவும் அபாயம் பெரிய அளவில் ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், "கோவிட் 19 வைரஸ் தாக்குதல் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அது பஞ்சாபிலும் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலேயே பஞ்சாபில்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதிகம்.
இந்த மாநிலத்தில் மட்டும் 90,000 பேர் வந்து இறங்கியுள்ளனர். பலருக்கு கோவிட் - 19 இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இவர்கள் தங்களுடன் தொடர்பில் இருப்பவர்களுக்கு, இந்த நோயைப் பரப்புகிறார்கள்.
இதனால் நோயை எதிர்த்து போரிடுவதற்கு, பஞ்சாபிற்கு இந்திய அரசிடமிருந்து குறைந்தபட்சம் ரூ. 150 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் இந்திய அரசு வாக்குறுதியளித்தபடி, மாநில மருத்துவ சேவைகளை வலுப்படுத்த இந்த தொகை விரைவில் பயன்படுத்தப்படும்.
நாங்கள் ஐ.சி.யுக்கள் (தீவிர சிகிச்சை பிரிவுகள்), தனிமைப்படுத்தும் வார்டுகள் போன்றவற்றை அமைத்து வருகிறோம். எங்களுக்கு கூடுதல் ஆட்கள், நிபுணர்கள், வல்லுநர்கள், மயக்க மருந்து நிபுணர்கள், நுரையீரல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தேவை. எங்களுக்கு மருந்துகள், தளவாடங்கள், வென்டிலேட்டர்கள் மற்றும் பல பொருட்களும் தேவை என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் மாநிலத்திற்கு திரும்பி வந்த ஒரு முதியவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, மேலும் 15 பேருக்கு பரவ காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 90,000 பேர்: நோயை பரப்பும் அபாயம் இருப்பதாக அமைச்சர் கடிதம் -
Reviewed by Author
on
March 26, 2020
Rating:

No comments:
Post a Comment