பெயிரூட் வெடிப்பு சம்பவம்...அரசாங்கத்தை பதவி விலகுமாறு போராட்டம்...
உலகையே உலுக்கிய பேரழிவுகரமான பெயிரூட் வெடிப்பு சம்பவத்திற்கு அரசாங்கத்தின் அலட்சியமே காரணம் எனும் கூறும் மக்கள், தற்போது போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.
நேற்று (வியாழக்கிழமை) பெயிரூட்டில் இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில், எதிர்பாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது.
ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகிய காரணங்களால் கொதிப்படைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களை, இந்த
வெடிப்பு சம்பவம் மேலும் வலியையும் அரசாங்கத்தின் மீதான வெறுப்பையும்
அதிகரிக்க செய்துள்ளது.
இந்தநிலையில், நாடாளுமன்றத்திற்கு அருகில் ஒன்று திரண்ட டசன் கணக்கான மக்கள், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர், கூட்டத்தை கலைக்க முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.
2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 137பேர் உயிரிழந்ததோடு, 5,000ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னமும் மீட்புப் பணிகள் தொடருவதால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க கூடுமென அஞ்சப்படுகின்றது.
இந்த வாரம் அரசாங்கம் அறிவித்த விசாரணையின் ஒரு பகுதியாக 16பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பேரழிவு ஏற்பட்டதில் இருந்து இரண்டு அதிகாரிகள் இராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் மார்வன் ஹமதே புதன்கிழமை பதவி விலகினார். அதே நேரத்தில் ஜோர்தானுக்கான லெபனானின் தூதர்
டிரேசி சாமவுன் வியாழக்கிழமை பதவி விலகினார்.

No comments:
Post a Comment