எஸ்.பி.பி.யின் இறுதிக் கிரியை இன்று
கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி, அதில் இருந்து மீண்ட நிலையில், திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, நேற்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.
அதனைத் தொடர்ந்து அவரது உடல், சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு, ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மேலும், எஸ்.பி.பி. உடல் இறுதிச் சடங்கிற்காக, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்திற்கு இன்று எடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரசிகர்கள் அஞ்சலி செலுத்த திரண்டதால் கொரோனா தொற்று அபாயம் உள்ளதாகக் கருதி நேற்று மாலையே அவரது உடல் தாமரைப்பாக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தாமரைப் பாக்கத்தில் அஞ்சலி செலுத்த மக்களுக்கு அனுமதி இல்லை எனவும் 500 பொலிஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திருவள்ளூர் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவரது உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
எஸ்.பி.பி. மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.பி.பி.யின் இறுதிக் கிரியை இன்று
Reviewed by Author
on
September 26, 2020
Rating:

No comments:
Post a Comment