வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை அதிகரித்து, நாட்டிற்கு வருமானத்தை ஈட்டும் புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டன-ஜனாதிபதி
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைத்துவ இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் குறித்து கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்ற போதே - இந்த விடயங்கள் ஆராயப்பட்டன.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமை சான்றிதழ்கள் உள்ள பயிற்றப்பட்ட ஊழியர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையில் ஈடுபடுத்தும் வேலைத் திட்டத்தைத் துரிதமாகவும் முறையாகவும் மேற்கொள்ள வேண்டும்.
அதன் மூலம் நாட்டுக்கும் ஊழியர்களுக்கும் அதிக நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், அவர்களுக்குத் தொழில் பாதுகாப்பையும் உறுதிசெய்ய முடியும்.
பயிற்றப்பட்ட ஊழியர்களுக்கான தேவை உலக தொழிற் சந்தையில் அதிகமாக உள்ளது. கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் தொழிற் சந்தைகளை இலக்காகக் கொண்டு பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது தேவையாக உள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை ஆகியன இணைந்து இதனை திட்டமிட வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளேன்.
போலாந்து, ரூமேனியா போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தொழிற் சந்தைகள் தற்போது இலங்கைக்கு திறந்துள்ளதன.
அவற்றுக்கு ஏற்றதான வகையில் பணியாளர் படை ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதனையும் அதிகாரிகளுக்கு நான் தெரிவித்துள்ளேன்.
பட்டதாரிகளுக்கு உள்ள வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளைக் கண்டறிய வேண்டியதும் அவசியமாக உள்ளது.
இதுவரையில், அது குறித்து உரிய கவனம் செலுத்தப்படவில்லை. எனினும் - கலைப் பட்டதாரிகளுக்கும் இந்த வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்க முடியும்.
தொழில் வாய்ப்புக்காகப் புலம்பெயர்வது இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன், இலங்கையின் மொத்த புலம்பெயர் பணியாளர்கள் 12 இலட்சம் பேர்களாகும்.
வருடாந்தம் சுமார் இரண்டு லட்சம் பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைத் தேடிச் செல்வதோடு, கொவிட் நோய்த்தொற்று காரணமாக இந்த வருடம் அந்த தொகை 40,000 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கொவிட் 19 நோய்த்தொற்றுக்கு வெற்றிகரமாக முகம்கொடுத்து - வெளிநாட்டு விமான நிலையங்கள் திறக்கப்பட்டதும், பயிற்றப்பட்ட பணியாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்ற வகையில் -
அவர்களுக்கு மொழி அறிவு மற்றும் பயிற்சிகளை விரிவுபடுத்தி வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு தேவையான பயிற்றப்பட்ட ஊழியர் குழாமொன்றை உருவாக்குவதற்காக - தற்போது 17 பயிற்சி நிலையங்களில் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தமது தொழில் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்திருந்தும் கூட- கொவிட் 19 காரணமாக நாட்டுக்குத் திரும்ப முடியாமல் உள்ள ஊழியர்களின் தொழில் ஒப்பந்தங்களை நீடிப்பதற்காக, அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடுமாறும் எமது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நான் பணிப்புரை விடுத்துள்ளேன்.
வெளிநாடுகளில் பணி புரியும் எமது தொழிலாளர்கள் அங்கு சம்பாதிக்கும் அந்நியச் செலாவணியை, நாட்டுக்கு கொண்டுவர, அரச வங்கிகள், அந்த தொழிலாளர்களின் பக்கம் நின்று செயற்பட வேண்டும்.
மிகவும் கவர்ச்சியானதும் ஆக்கத்திறன் வாய்ந்ததுமான வேலைத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் அதனை மேம்படுத்த முடியும்.
வெளிநாடுகளில் உள்ள எமது தொழிலாளர்கள் எமது நாட்டுக்கு அனுப்பும் அந்நியச் செலாவணியை அவர்களது வீடுகளுக்கே கொண்டு சென்று கையளிக்கும் பொறிமுறை ஒன்றை அரச வங்கிகளின் ஊடாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதன் மூலம் - உண்டியல் போன்ற, முறையற்ற வகையில் இடம்பெறும் பண சுழற்சியை தவிர்க்கவும் முடியும்.
தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஊழியர்களுக்கு வெளிநாடுகளில் ஏற்படும் அசௌகரியங்களின் போது இந்த நிறுவனங்களின் தலையீடு போதுமானதாக இருப்பதில்லை என பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
எமது நாட்டு மக்களைத் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முக்கிய எதிர்பார்ப்பு, நாட்டுக்கு அந்நியச் செலாவணியைச் சம்பாதி அல்ல; மாறாக, அவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதேயாகும்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை அதிகரித்து, நாட்டிற்கு வருமானத்தை ஈட்டும் புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டன-ஜனாதிபதி
Reviewed by Author
on
October 15, 2020
Rating:

No comments:
Post a Comment