அண்மைய செய்திகள்

recent
-

உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்க நடவடிக்கை

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். நடுக்கடலில் மீனவர்களின் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தியும் மீனவர்களின் உடலை தமிழகம் எடுத்து உடற்கூறு ஆய்வு செய்ய கோரியும் இறந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டியும் ராமேஸ்வரம் மீனவர்கள், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். 

 கடந்த 18 ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ஜேசு என்பவரது படகில் மேசியா, நாகராஜன், செந்தில்குமார், சாம் ஆகிய நான்கு மீனவர்களும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று, மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். குறித்த மீனவர்கள் நெடுந்தீவுக்கு கச்சத்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்யப்போவதாக எச்சரித்ததாக கூறப்படுகின்றது.

 இதனால் அச்சம் அடைந்த மீனவர்கள், அங்கிருந்து தப்ப முயன்றபோது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மீது மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் படகில் இருந்த நால்வரும் நடுக்கடலில் மாயமாகினர். மாயமான மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக இலங்கை கடற்படையினர் தேடி வந்த நிலையில் நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 இந்த நிலையிலேயே மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் தங்கச்சி மடத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி உயிரிழந்த நான்கு மீனவர்களின் உடல்கள் தமிழகம் கொண்டு வரப்பட்டு, தமிழக மருத்துவர்களால் உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் 1974ஆம் ஆண்டு போடப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்பட்டுவரும் இலங்கை அரசை கண்டித்தும், எதிர்வரும் 24ஆம் திகதி முதல் கடலோர மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து தங்கச்சி மடத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக முடிவு செய்துள்ளனர்.



உயிரிழந்த மீனவர்களுக்கு நீதி கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்க நடவடிக்கை Reviewed by Author on January 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.