ரணிலால் மட்டுமே வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் -ஏ.சமீயூ முகம்மது பஸ்மி
 இலங்கையின் எட்டாவது புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவியேற்றுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் தொகுதி அமைப்பாளர் ஏ.சமீயூ முகம்மது பஸ்மி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே, மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
கடந்த 2019 ஆம் ஆண்டு நம் இலங்கை திருநாட்டை சூழ்ந்திருந்த அந்தகார இருள் கடந்த 20ஆம் திகதியுடன் நீங்கிவிட்டது. மதவாதமும் இனவாதமும் இரண்டறக் கலந்த, முன்னைய  ஆட்சியாளர்களினால்  இலங்கை தேசமும், அதன் மக்களும் வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத பேர் அவலங்களை எதிர்கொண்டனர்.
நாட்டின் விவசாயிகளும், தொழில் முயற்சியாளர்களும் தற்கொலையை செய்யும் அளவுக்கு மாற்றம் பெற்றனர். 
மூவேளை உணவு ஒருவேளையானது. மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் உறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இலங்கையின் அனைத்து துறையும் பணம் ஈட்டும் மையங்களாக மாற்றம் பெற்றது. ஊழலும், லஞ்சமும், வஞ்சமும், வன்மமும் தாண்டவமாடியது. தமிழ் பேசும் சிறுபான்மை மக்கள் என்றுமில்லாத வகையில்  அரச அடக்குமுறைகளுக்கு உள்ளாகினர்.
முஸ்லிம்களின் பிறப்புரிமையான ஜனசா நல்லடக்கம், பலவந்த தகனமா மாற்றம்பெற்றது. அனைத்து சிவில் செயற்பாடுகளும், இராணுவ மயமாக்கப்பட்டு
உலக வரைபடத்தில்,  இலங்கை அவலங்களும், அவஸ்தைகளும், அடக்குமுறைகளும் நிறைந்த தேசமாக காட்சிப்படுத்தப்பட்டது. இத்தகைய கடினமான சூழ்நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளமை  நம்பிக்கை ஒளிக்கீற்றை  நம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
 அதாள பாதளத்தில் உள்ள இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் அதீத வல்லமை ரணில் விக்கிரமசிங்கவிற்கு மட்டுமே உள்ளது. நாட்டின் இளைஞர் சமுதாயத்திற்கான எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் சிறந்த தீர்வை ரணில் கொண்டுள்ளார்.
 குடிமக்களின் அடிப்படை பிரச்சினைகளை இல்லாதொழித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான ஓருமம் கொண்ட ஒருவரே இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகும். தொகுதி அமைப்பாளராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக பரிணமித்த ரணில் விக்கிரமசிங்கே, இலங்கையின் ஜனாதிபதியாக நாட்டைப் பொறுப்பெடுத்தமை  இன்றைய காலத்தின் கட்டாய தேவையாகும். 
 அரசியலில் தொலைநோக்கு பார்வையும் அதீத சகிப்பு தன்மையும் கொண்டுள்ள இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பி நாட்டில் சகஜ நிலையை ஏற்படுத்த முடியும்.
 இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சகல உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இணைந்து  புதிய ஜனாதிபதிக்கு  எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என ஐக்கிய தேசிய கட்சியின் மன்னார் அமைப்பாளர்
ஏ. சமீயூ முகம்மது பஸ்மியின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 ரணிலால் மட்டுமே வங்குரோத்து அடைந்துள்ள இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் -ஏ.சமீயூ முகம்மது பஸ்மி
 
        Reviewed by Author
        on 
        
July 22, 2022
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
July 22, 2022
 
        Rating: 



No comments:
Post a Comment