அண்மைய செய்திகள்

recent
-

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இன்று(26) முதல் எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை இன்று(26) முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியிலுள்ள சிபெட்கோ மற்றும் லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப அல்லது உபகரண குறைபாடுகள் நிலவும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், அதனை நிவர்த்தி செய்யும் வரை வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்திற்கு அமைவாக அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்க முடியமென அமைச்சு கூறியுள்ளது. 

 எவ்வாறாயினும், எதிர்வரும் முதலாம் திகதி முதல் தேசிய எரிபொருள் அனுமதி அட்டையை வைத்திருப்பது மாத்திரமே, மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த அறிவிப்பிற்கு இணங்க செயற்படுமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடமும் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. பல வாகனங்களை கொண்ட நிறுவனங்கள், தமது வர்த்தக அனுமதிப்பத்திரத்தின் ஊடாக அனைத்து வாகனங்களையும் பதிவுசெய்து கொள்ளவும் அரச வாகனங்களை பதிவு செய்துகொள்ள அந்தந்த அரச நிறுவனங்களின் பிரதானிகள் ஊடாக பெயரிடப்பட்ட ஒரு அதிகாரி, செயலியை பயன்படுத்தவும் தரவுகளை உள்ளிடவும் அனுமதிக்கப்படுவார் என அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜெனரேட்டர்கள், பயிர்ச்செய்கை உபகரணங்கள் மற்றும் ஏனைய இயந்திரங்களுக்கான எரிபொருள் தேவையை பதிவு செய்வதற்கு பிரதேச செயலாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் மற்றும் பிரதேச செயலாளர்கள் தமது அதிகார எல்லைக்குட்பட்ட முச்சக்கரவண்டிகளை ஒதுக்கி அந்த பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒவ்வொரு முச்சக்கரவண்டிகளையும் பதிவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையங்கள் ஊடாக பயணிகள் போக்குவரத்து பஸ்களுக்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு தேவையான ஒதுக்கீட்டை மேற்கொள்ள போக்குவரத்து அமைச்சுக்கு அங்கீகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் சுகாதாரம், விவசாயம், மீன்பிடி, சுற்றுலா, கைத்தொழில் மற்றும் ஏனைய துறைகளுக்கு தேவையான எரிபொருளைப் பெறுவதற்கான பதிவுகள் ஒவ்வொரு அமைச்சினாலும் அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்கு இன்று(26) முதல் எரிபொருள் விநியோகம் Reviewed by Author on July 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.