அண்மைய செய்திகள்

recent
-

மல்லாவியில் கொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் வீசப்பட்ட இளைஞரின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய மக்கள் போராட்டம்

 மல்லாவியில் கொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் வீசப்பட்ட இளைஞரின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய மக்கள் போராட்டம்


வவுனிக்குளத்திலிருந்து கடந்த 30.07.2024 அன்று சடலமாக மீட்கப்பட்ட 

முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற  இளைஞன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை உறுதிப்படுத்தியிருந்தது


இதனைத் தொடர்ந்து கொலையுடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் குறித்த இளைஞனின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில்  பொதுமக்கள்  பொது அமைப்புக்கள் மற்றும் வர்த்தக சங்கம் என்பன இணைந்து  மாபெரும் போராட்டம் ஒன்றை நேற்று(16) முன்னெடுத்தனர்


19 நாட்களாகியும் குறித்த இளைஞனின் படுகொலைக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன் பொலிசாரின் விசாரணைகள் மந்தகதியில் நடப்பதாக கூறியும் , துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்றும் கூறியே பொதுமக்கள் மற்றும் போது அமைப்புக்களினால் நேற்று(16) குறித்த  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது 


நேற்று (16)காலை மல்லாவி  மத்திய பேருந்து நிலையம் முன்பாக  ஆரம்பிக்கப்பட்ட இந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமானது மல்லாவி பொலிஸ் நிலையம் முன்பாக நிறைவடைந்தது


ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஒன்று கூடி ,

"சசீவன் மரணத்திற்கு  நீதி வேண்டும்"

"கொலையாளிகளை நீதியின் முன் நிறுத்து"

"விசாரணைகளை துரிதப்படுத்தி நீதியை பெற்று தா"

"எமது நண்பனின் மரணத்திற்கு நீதி வேண்டும்"

"வஞ்சகரின் சூழ்ச்சிக்கு முடிவில்லையா"

"எமது பிள்ளைக்கு நீதி வேண்டும் "

போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்


இதேவேளை குறித்த  போராட்டத்திற்கு ஆதரவாக  இன்றைய தினம் மல்லாவி பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டிருந்தன 


பொலிஸ் நிலையம் முன்பு ஒன்று கூடிய மக்கள் வீதியை மறித்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவேளை , சம்பவ இடத்திற்கு  வருகை தந்த மல்லாவி பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி அவர்கள் , குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் , இளைஞனின் படுகொலைக்கான நீதியினை தான் பெற்று தருவதாகவும் தெரிவித்திருந்தார் 


இதேவேளை குறித்த காலப்பகுதிக்குள் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை நீத்தியின் முன் நிறுத்தாவிடின் பாரியளவிலான போராட்டம் ஒன்றினை தாம் மேற்கொள்வோம் என்றும் , சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினையும் தாம் முன்னெடுப்போம் என்றும் எச்சரித்து,பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது



குறித்த போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான செலவராசா கஜேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,முன்னாள்  பாராளுமன்ற  உறுப்பினர் சாந்தி  ஸ்ரீஸ்கந்தராசா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்கள் சமூக செயற்ப்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்


கடந்த 29.07.2024 அன்று இரவு  சுமார் இருபது இலட்சம் ரூபா பணத்துடன் யோகபுரத்தில்  இருந்து பாண்டியன் குளம் சென்ற முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியினை சேர்ந்த ஆனந்தரசா ஜீவன் (வயது 27) என்ற   இளைஞனை காணவில்லை என உறவுகள் தேடிய நிலையில் 30.07.2024 அதிகாலை வவுனிக்குளம் குளத்தில் உடலமாக மீட்கப்பட்டார்.


இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகைதந்து உடலத்தை  பார்வையிட்ட முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ் ஏச் மக்ரூஸ் உடலத்தை உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தார்


இந்நிலையில் 31.07.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் உடற் கூற்றுப் பரிசோதனை இடம்பெற்றது.


 உடற்கூற்றுப் பரிசோதனையின் முடிவில் குறித்த இளைஞன் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின்  அறிக்கையில் குறிப்பிடப்பட்ட நிலையில் உடலம் உறவுகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  பல்லாயிரக்கணக்கான மக்களது இறுதி அஞ்சலியுடன் இறுதிக் கிரியைகள் முன்னெடுக்கப்பட்டது  


சம்பவம் தொடர்பில் நட்டாங்கண்டல்  பொலிஸார்   மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்ற போதும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 















மல்லாவியில் கொலை செய்யப்பட்டு வவுனிக்குளத்தில் வீசப்பட்ட இளைஞரின் கொலைக்கு நீதி கோரி மல்லாவியில் பாரிய மக்கள் போராட்டம் Reviewed by Author on August 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.