அண்மைய செய்திகள்

recent
-

குப்பைக்கு எதிராக போராட்டம்!

கொழும்பிலிருந்து குப்பைகளை ரயிலில் புத்தளத்திற்கு கொண்டுவரும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என கோரி புத்தளத்தில் இன்று (25) நள்ளிரவு 12.30 மணிக்கு அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சுமார் இரண்டு மணி நேரம் புத்தளம் - நூர்நகர் ரயில் நிலையத்திற்கு முன்பாக இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் தூய தோசத்திற்கான கட்சியின் தலைவர் இஷாம் மரிக்கார் உட்பட இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக கொழும்பிலிருந்து குப்பைகளை ஏற்றிய விஷேட ரயில் புத்தளம் அருவக்காடு – சேராக்குளி பகுதிக்கு இன்று அதிகாலை வருகை தரவுள்ளதாக க்ளீன் புத்தளம் குழுவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

எனினும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு கோரி சந்ததிகளை காக்கும் சரித்திரப் போராட்டம் எனும் தலைப்பில் புத்தளத்தில் வாழும் மூவின மக்களும் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததுடன், தொடர்ச்சியாக சத்தியக்கிரக போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
 
எனினும், புத்தளம் மக்களின் எதிர்ப்புக் கோஷங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அருவக்காடு, பகுதியில் திண்மக்கழிவு அகற்றும் திட்டத்தின் கீழ் நிர்மாணப்பணிகளைப் பூர்த்தி செய்து அதன் பணிகளையும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

குப்பைக்கு எதிராக புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது சிலர் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் குறிப்பிட்டனர்.

எனினும், நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையில் இருக்கின்ற போது யாருக்கும் தெரியாமல் நடு இரவில் கொழும்பிலிருந்து குப்பைகளை இவ்வாறு ரயில் மூலம் புத்தளத்திற்கு கொண்டு வருவது பிழையான நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டுவதற்காக இவ்வாறு அமைதியான முறையில் இந்த கவனயீர்ப்பினை முன்னெடுத்தாக கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை எதிர்காலத்தில் இவ்வாறான ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்குமாக இருந்தால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைப் போல எதிர்காலத்திலும் குப்பைக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்  இந்த கவனயீர்ப்பினை அமைதியான முறையில் மேற்கொண்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, பரீட்சார்த்த நடவடிக்கைகளுகாக கொழும்பில் இருந்து ஒருதொகுதி குப்பைகளை ஏற்றிய விஷேட ரயில் இன்று காலை 10.30 மணிக்கு புத்தளம் ரயில் நிலையம் ஊடாக அருவக்காடு – சேராக்குளி பகுதியை நோக்கிப் பயணித்தமையை அவதானிக்க முடிந்தது.
 
இவ்வாறு குப்பைகளை ஏற்றிய ரயில் மிகவும் வேகமாக பயணம் செய்ததுடன், ஒருவிதமான துர்நாற்றமும் வீசியதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், பரீட்சார்த்த நடவடிக்கைகளுக்காக ஒருதொகுதி குப்பைகளை ஏற்றிய விஷேட ரயில் கொழும்பில் இருந்து புத்தளம் - அருவக்காடு பகுதிக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வருகை தரவுள்ளதாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமைச்சு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வன்னாத்தவில்லு பிரதேச சபையின் செயலாளர் குறிப்பிட்டார்.



குப்பைக்கு எதிராக போராட்டம்! Reviewed by Author on August 25, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.