ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி பணிப்புரை!
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல வாகனங்கள் காலி நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.
ஜனாதிபதி செயலகத்தினூடாக பல்வேறு பணிகளுக்காக நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 97 அரச வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளதாக இன்று தெரண மேற்கொண்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தை அடுத்துள்ள காலி நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (24) முதல் குறித்த வாகனங்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
புதிய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அந்த வாகனங்களை பயன்படுத்தியவர்கள் வாகனங்களை நிறுத்தியுள்ளதாக இன்று அந்த இடத்திற்கு விஜயம் செய்த தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை பொதுமக்கள் பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
September 25, 2024
Rating:


No comments:
Post a Comment