எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக மன்னார் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள சாள்ஸ் நிர்மலநாதன்..
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை(3) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்
ஞாயிற்றுக்கிழமை(3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார் .
இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.
புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய போது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன். அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபான சாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.
நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கி யிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக் கொண்டதாகவும் சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.
அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும் அது முற்றிலும் பொய் என்றும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக, உளவியல் ரீதியாக கட்சியோடு பயணிப்பதா? இல்லையா ? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும் அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.
அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன். அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை. அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே.
அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்.
அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது. என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்ட துடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றி இருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.
இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கு தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன்.
சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடு களோடுதான் பயணித்தேன். இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது.
என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபட வேண்டும். ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஆனால் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.
அதே நேரம் சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை. எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.
அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை .அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும் எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்.
சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.
எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக மன்னார் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள சாள்ஸ் நிர்மலநாதன்..
Reviewed by Author
on
November 04, 2024
Rating:
Reviewed by Author
on
November 04, 2024
Rating:


No comments:
Post a Comment