பயங்கரவாத தடைச் சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
சர்வதேச மனித உரிமைகள் தினமான 10.12.2024 அன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட மேலாளர் கணபதி பிரஷாந்த்
இலங்கையில் காணப்படுகின்ற பயங்கரவாத தடுப்பு சட்டத்தை உடனடியாக ஜனாதிபதி அவர்கள் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்
முல்லைத்தீவில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திகான நிறுவனத்தின் (ECDO) முல்லைத்தீவு மாவட்ட அலுவலகத்தில் வைத்து 10.12.2024 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் 1979 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்த காலங்களில் இல்லாமல் ஆக்கப்படும் எனக்கோரியே இது உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றைக்கு 45 வருடங்களாக தொடர்ச்சியாக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் தமிழ், முஸ்லிம் மக்களையே அதிகம் பாதித்து வந்துள்ளது.
இருந்த போதும் தற்போது ஆட்சிக்கு வந்திருக்கின்ற ஜனாதிபதி அவர்கள் இந்த சட்டத்தை தான் உடனடியாக நிறுத்துவதாக கோரி பல மேடைகளில் வாக்குறுதி வழங்கி இருந்தார். ஆனால் இதுவரையும் இந்த சட்டங்கள் நிறுத்துவதற்கு எந்த நடைமுறையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. ஆனால் கடந்த காலங்களில் நினைவேந்தலை மேற்கொண்ட நபர்களாக இருக்கலாம் அல்லது திருகோணமலையை சேர்ந்த சமூக செயற்பாட்டாளராக இருக்கலாம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்காக தொடர்ச்சியாக அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே ஜனாதிபதியினுடைய வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றுமாறு சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் கூறி நிற்கின்றது.
வடகிழக்கு பகுதியிலே வாழ்கின்ற தமிழர்கள் தங்களுடைய அதிகார பகிர்வை நோக்கிய போராட்டங்களில் ஈடுபடுகின்ற போது அதனை முழுமையாக மழுங்கடிக்க செய்வதற்கு அல்லது மௌனிக்க செய்வதற்கு இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தின் ஊடாக இதனை தலைமை தாங்கி நடத்துகின்ற தலைமைகள் விசாரணைகளுக்கு, கைதாகுதவால் அவர்களுடைய போராட்டங்கள் கூட மௌனிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த பயங்கரவாத தடைசட்டம் முழுக்க வடக்கு, கிழக்கு சிறுபான்மையின தமிழ், முஸ்லிம் மக்களையே அதிகம் பாதிக்கின்றது. ஆகவே இதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம், மகாவலி எல்வலயத்தினால் காணிகளை இழந்த மக்கள் பிரதிநிதி, கேப்பாபிலவு காணியை இழந்த கிராம கட்டமைப்பினர் என பலரும் கலந்து கொண்டு கருத்துக்களை கூறியிருந்தனர்.

No comments:
Post a Comment