தைப்பொங்கலுக்கு அரிசி இல்லை – வர்த்தகர்கள் போராட்டம்
அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அக்கரப்பத்தனை மன்றாசி நகரில் வர்த்தகர்கள் இன்று (10.01.2025) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அக்கரப்பத்தனை, மன்றாசி நகர வர்த்தகர்கள் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது, நகர வர்த்தகர்களும், பொது மக்களும் கலந்துக் கொண்டு சுலோகங்களை ஏந்தியவாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால் அதனை உரிய வகையில் நுகர்வோருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனால் சிறு வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கருத்து தெரிவித்த போராட்டகாரர்கள்,
நாட்டில் தைப்பொங்கல் வருகின்றது. இதற்கு பொங்கல் பொங்குவதற்கு சிவப்பு அரிசி உள்ளிட்ட அரிசி வகைகள் தேவைப்படுகின்றது. எனினும், அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது.
கட்டுப்பாட்டு விலைக்கு தான் எங்களுக்கு அரிசி வழங்கப்படுகின்றது. அவ்வாறு கட்டுப்பாட்டு விலையை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
கொழும்பிலிருந்து இந்த பகுதிக்கு அரிசியை கொண்டு வருவதாக இருந்தால் போக்குவரத்து கட்டணம், சுமை தாங்கிகளின் கட்டணம் என பல விடயங்கள் இருக்கின்றன.
எனவே, கட்டுப்பாட்டு விலைக்கு விற்கமுடியாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கும், அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.
Reviewed by Author
on
January 10, 2025
Rating:


No comments:
Post a Comment