அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் ஆரம்பமான 'மாற்குவின் கலை அம்பலம்' காண்பியக் காட்சி

 

 இலங்கைத்  தமிழர் மத்தியில் நவீன ஓவியத்தை பிரபலப்படுத்திய அ.மாற்கு அவர்களின் கலைப்படைப்புகளை ஒன்று திரட்டி மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் காண்பியக் காட்சி இன்றைய தினம்  வியாழக்கிழமை( 13)மன்னாரில் ஆரம்பமாகி உள்ளது.


மன்னார் வயல் வீதி, சின்னக்கடை என்ற இடத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி மாலை 5 மணி வரை குறித்த கண்காட்சி இடம்பெறும்.

 

மாற்கு அவர்களின் மாணவர்கள் மற்றும் குடும்பத்தார் இணைந்து குறித்த காண்பியக் காட்சியை ஏற்பாடு செய்துள்ள நிலையில் மாற்கு அவர்களால் உருவாக்கப்பட்ட நூற்றுக்கு அதிகமான கலைப்படைப்புக்கள் மக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


எனவே குறித்த கண்காட்சி யை அனைவரும் வருகை தந்து பார்வையிடுமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அ. மாற்கு 1933ஆம் ஆண்டு குரு நகரில் பிறந்தார். புனித சம்பத்திரிசியார் கல்லூரியில் கல்வி கற்றார். சிறு வயதிலேயே ஓவியம் வரைவதில் சிற்பங்கள் செய்வதிலும் விருப்பம் கொண்டிருந்தார்.


தனது ஆரம்ப ஓவியப் பயிற்சியை ஓவியர் எஸ். பெனடிக்ற் அவர்களிடம் பெற்றுக்கொண்டார். பின்னர் 1 953 இல் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் இணைந்து ஐந்து வருடங்கள் பயின்று பட்டம் பெற்றார். அங்கு அவரின் விரிவுரையாளராக இருந்த டேவிற் பெயின்ரர் இவரின் ஓவியங்களை பாராட்டியும் ஊக்கப்படுத்தியும் வந்தார்.


இவர் 1958-1967 வரையான காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஓவியர் எம்.எஸ் கந்தையாவினால் உருவாக்கப்பட்ட "விடுமுறைக்கால ஓவியக் கழகத்தில்" (Holiday Painter's Group) இணைந்து இளையவர்களுக்கு ஓவியத்தை கற்றுக் கொடுத்துள்ளார்.


ஆரம்பத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பின்னர் கொக்குவில் இந்து கல்லூரியிலும் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார்.


 அத்துடன், 1960 களின் இறுதியில் இயங்காது போன "விடுமுறை ஓவியக் கழகத்தை" 1980 களின் மத்தியில் வீட்டில் உருவாக்கி இருந்த ஓவியக் கூடத்தில் ஆரம்பித்து, இடம்பெயர்ந்து வன்னியிலும் மன்னாரிலும் வாழ்ந்த காலங்களிலும் தொடர்ந்து நூற்றுக்கணக்கான வர்களுக்கு ஆசானாக திகழ்ந்தார். 


இவர்களில் பலர் இன்றும் உலகின் பல பாகங்களிலும் ஓவியர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


1998இல் மன்னாருக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்தனர். 


உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக கை,கால்களில் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது. கைகளுக்கு கொடுக்கப்பட்ட உடல் பயிற்சிகளின் மூலம் மீண்டும் கைகள் பலம் பெற, மீண்டும் ஓவியங்கள் படைக்க தொடங்கினார். 


 போர் நடைபெற்றுக் கொண்டிருந் ததால் தொடர்புகளற்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் இருந்த ஓவியங்கள் அனைத்தும் போரால் அழிந்திருக்கும் என்ற நினைப்பில் பழைய ஆக்கங்கள் பலவற்றை மீளவும் உருவாக்கினார். 


இறுதி வரை எப்போதும் போல் பத்திரிகை தாள்கள், சஞ்சிகைகள், பொருட்கள் வரும் மட்டைகள் என்பவற்றில் எண்ணெய் சுண்ணம், கரித்துண்டு, பேனைகள் எனக் கிடைப்பவற்றைக் கொண்டு ஓவியங்களை படைத்துக் கொண்டே இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது









மன்னாரில் ஆரம்பமான 'மாற்குவின் கலை அம்பலம்' காண்பியக் காட்சி Reviewed by Vijithan on March 13, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.