உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு மக்கள் மத்தியில் ஆர்வம் குறைந்துள்ளது
பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பித்த நாள் முதல் இதுவரையிலான காலப்பகுதியில், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எந்தவொரு தீவிர நிலைமையும் பதிவாகவில்லை என, தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பெஃப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாக சில முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பாக 20 முறைப்பாடுகளும், தனிநபர் தாக்குதல்கள் தொடர்பாக 15 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்தது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள ஆர்வம் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தமது கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக பெஃப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி அத தெரணவிற்கு தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 4,000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தபால் மூல வாக்கெடுப்பை கண்காணிப்பதற்காகவும் 200 கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரோஹன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
April 18, 2025
Rating:


No comments:
Post a Comment