மன்னாரில் இருந்து ராமர் பாலத்தின் ஆறாவது மணற்திட்டு வரை மே 15 முதல் சுற்றுலா பயணிகளுக்கு படகு சேவை
மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்தநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மே மாதம் 15 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார். திட்டத்தை ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாக தாமதமான இந்த திட்டத்தை வெகு விரை வில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக நேற்றைய கூட்டத்தில் குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.
அதே நேரம் பாதுகாப்பு ஏற்பாடுகள், பயணிகள் எண்ணிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில்
கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும் கூட்டத்தில் கூறப்பட்டது.
அடுத்த கட்டமாக சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் தீர்மானிப்பது எனவும் நேற்றைய கூட்டத்தில் முடிவு காணப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment