வாக்களிக்க விடுமுறை கிடைக்கவில்லையா? வௌியான விசேட அறிவிப்பு
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வாக்களிப்பதற்காக தேர்தல் சட்டத்தின் விதிகளின்படி விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிறுவனத் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று (02) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விடுமுறை வழங்குவது அவசியமானது என தெரிவித்தார்.
அரச அதிகாரிகளுக்கு, வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து, நிறுவனத் தலைவர் தீர்மானிக்கும் போதுமான கால அவகாசத்துடன், குறைந்தபட்சம் 2 மணி நேர விடுமுறை வழங்குவது அவசியம் என தலைவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தனியார் துறைக்கு விடுமுறை வழங்குவதற்காகவும் தேர்தல் ஆணைக்குழு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாக்களிப்பு நிலையத்திற்கு 40 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அரை நாள், 40 முதல் 100 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒரு நாள், 100 முதல் 150 கிலோமீட்டர் வரை இருந்தால் ஒன்றரை நாள், 150 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், சில வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தூரத்தைப் பொறுத்து இதற்கு மேல் கூடுதல் நாட்கள் விடுமுறை தேவைப்படலாம் என தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
இதற்கிடையில், உள்ளாட்சி மன்றத் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நாளை (03) நள்ளிரவு முதல் முடிவுக்கு வரும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 03 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் நாள் வரையிலான காலம் தேர்தல் அமைதிக் காலமாக கருதப்படுகிறது.
தற்போது, உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடு வீடாக விநியோகிக்கும் பணி முடிவடைந்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள், தமது பிரதேசத்தில் உள்ள உப தபால் அலுவலகத்திற்கு சென்று அந்த அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

No comments:
Post a Comment