மட்டக்களப்பு மாநகரசபையின் ஆட்சியை கைப்பற்றியது தமிழரசு கட்சி
மட்டக்களப்பு மாநகரசபையின் எட்டாவது முதல்வராக இலங்கை தமிழரசுக்கட்சியின் உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சிவம் பாக்கியநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் பிரதி முதல்வராக தமிழரசுக்கட்சியை சேர்ந்த வைரத்து தினேஸ்குமார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தெரிவுசெய்யும் வகையிலான அமர்வு இன்று காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது முதல்வரை தெரிவுசெய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியை சேர்ந்த மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நவரத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகள் இன்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகரசபை முதல்வராக தெரிவு செய்யப்பட்டார்.
இதேபோன்று பிரதி முதல்வருக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டபோது மாநரசபை உறுப்பினர் வை.தினேஸ் அவர்களை பிரதி முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநகரசபை உறுப்பினர் து.மதன் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியின் மாநகரசபை உறுப்பினர் மீரா சாஹிபு ஆயிசா உம்மா வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்னுமொரு தெரிவாக முன்னாள் மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் அவர்களை சுயேட்சைக் குழு உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமார் முன்மொழிய வி.சசிகலா வழிமொழிந்தார்.
இதன் பிரகாரம் பிரதி முதல்வர் தெரிவு தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் வாக்கெடுப்பு இரகசிய முறையிலா? பகிரங்க முறையிலா? என்பதற்கான உறுப்பினர்களின் விருப்பு கோரப்பட்டது.
இதன் பிரகாரம் 22 உறுப்பினர்கள் பகிரங்க வாக்களிப்புக்கு விருப்பு தெரிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் பிரதி முதல்வருக்கான வாக்கெடுப்பு பகிரங்க முறையில் இடம்பெற்றது.
அந்த வகையில் வை.தினேஸ் அவர்களுக்கு ஆதரவாக 18 வாக்குகளும், க.சத்தியசீலன் அவர்களுக்கு ஆதரவாக 04 வாக்குகளும் கிடைக்கபெற்றன. இதன்போது தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் 12 பேர் நடுநிலைமை வகித்தனர்.
இதன்படி மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிவம் பாக்கியநாதன் மற்றும் பிரதி முதல்வராக வை.தினேஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய அமர்வினை பார்வையாளர்கள் அரங்கில் இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த முக்கிஸ்தர்களும் வருகைதந்திருந்ததை காணமுடிந்தது.
சபை அமர்வினை தொடர்ந்து முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோர் தமது கடமைகளை பொறுப்பேற்றதுடன் அவர்களுக்கு கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டதை காணமுடிந்தது.

No comments:
Post a Comment