களமோட்டை வயலுக்குச் செல்வதற்கு ஆற்றுப்பாலம் இன்மையால் விவசாயிகள் அவதி; நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி
களமோட்டை வயலுக்குச் செல்வதற்கு ஆற்றுப்பாலம் இன்மையால் விவசாயிகள் அவதி; நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டார் ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட மதவளசிங்கன்குளம் நீர்ப்பாசனக்குளத்தின்கீழுள்ள களமோட்டை வயல்பகுதிக்கு ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலம் இன்மையால் விவசாயிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி விவசாயிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்கு இதுதொடர்பில் தெரியப்படுத்தியதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், குறித்த பாலத்தினை நிர்மாணிப்பதுதொடர்பில் கவனம் செலுத்தவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முல்லைத்தீவு - முள்ளியவளை கமநலசேவைநிலையப் பிரிவிலுள்ள மதவளசிங்கன்குளத்தின் கீழுள்ள களமோட்டை பகுதி வயல்நிலங்களுக்கு ஆற்றைக்கடந்து செல்வதற்கான பாலம் இன்மையால் விவசாயிகள் பெருத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
களமோட்டைப்பகுதியில் 220ஏக்கர் வயல்நிலங்களில் பெரும்போகம் மற்றும் சிறுபோக நெற்பயிற்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இந்நிலையில் குறித்த களமோட்டை வயல்பகுதிக்கு செல்லும் வழியின் குறுக்கே உள்ள ஆற்றைக் கடந்துசெல்வதற்கு பாலமொன்று இன்மையால் நெற்பயிற்செய்கைக் காலத்தில் நிலப்பண்படுத்தலுக்கு உழவியந்திரத்தை கொண்டுசெல்லுதல், விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல், விவசாய நிலங்களக்கான காவலுக்குச் செல்லுதல், அறுவடைக்காலத்தில் அறுவடை இயந்திரத்தைக் கொண்டுசெல்வது, அறுவடையை எடுத்துச்செல்வது உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் விவசாயிகள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை சிலசந்தர்ப்பங்களில் 35அடி தூரமான ஆற்றைக்கடப்பதற்குப்பதிலாக 15கிலோமீற்றர் சுற்றியே தமது விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டிய அவலநிலையை களமோட்டைப் பகுதியில் நெற்செய்கை மேற்கொண்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கைக்கமைய நிலமைகளை நேரில்சென்று பார்வையிட்ட வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த ஆற்றுப்பாலத்தை அமைப்பதுதொடர்பில் தம்மால் கவனம்செலுத்தப்படுமெனத் தெரிவித்திருந்தார்.
மேலும் குறித்த களவிஜத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுடன் முள்ளியவளை கமநலசேவைநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் பேரம்பலம் தயாரூபன், மதவளசிங்கன்குளம் கமக்கார்அமைப்பின் பிரதிநிதிகள், களமோட்டைப்பகுதியில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment