சந்தேகநபர் தப்பியோட்டம் - மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு கல்கிசை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இருந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பெண் சந்தேகநபர், தப்பியோடிய சம்பவம் தொடர்பில் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இரவு நேரப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய மற்றும் உதவிப் பணியாளராகக் கடமையாற்றிய இரண்டு சார்ஜன்ட்களும், சந்தேக நபரின் பாதுகாப்புக்காக அமர்த்தப்பட்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிளுமே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண் சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மொரட்டுவை விசேட அதிரடிப்படை முகாமின் விசேட நடவடிக்கைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
ரத்மலானை மெலிபன் சந்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து 36,650 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டிருந்தது.
தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேக நபர், கடந்த 16ஆம் திகதி தனது இயற்கை உபாதையைத் தீர்க்க வேண்டும் எனக் கூறி பெண் கான்ஸ்டபிளுடன் கழிவறைக்குச் சென்றபோது, அங்கிருந்து தப்பிச் சென்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றில் ஏறித் தப்பியோடியுள்ளார்.
எவ்வாறாயினும், தப்பியோடிய சந்தேக நபர் 8 மணித்தியாலங்களுக்குப் பிறகு அன்றைய தினமே தலவத்துகொட கிம்புலாஎல பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவினரால் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சந்தேகநபர் தப்பியோட்டம் - மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
Reviewed by Vijithan
on
February 20, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 20, 2026
Rating:


No comments:
Post a Comment