உலக தாய்மொழி தினம் இன்று
உலக தாய்மொழி தினம் இன்றைய தினத்தில் ( 21) அனுஷ்டிக்கப்படுகிறது.
மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ (UNESCO) பொது மாநாட்டில் உலக தாய்மொழி தினம் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2000 ஆம் ஆண்டிலிருந்து இது உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நிலையான சமூகங்களைக் கட்டியெழுப்புவதற்கு கலாச்சார மற்றும் மொழி பன்முகத்தன்மை அவசியம் என்று யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த தினத்தை அனுஷ்டிப்பதற்கான முன்மொழிவை முதன்முதலில் பங்களாதேஷ் நாடே சமர்ப்பித்தது.
பங்களாதேஷின் தாய்மொழியைப் பாதுகாப்பதற்கான தனித்துவமான வரலாறு, மொழி பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மைக்கான அந்நாட்டின் அர்ப்பணிப்பு ஆகியவை இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தன.
1952 ஆம் ஆண்டில் உருது மொழியை தேசிய மொழியாக அறிவிக்க அந்த நாட்டு அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்தன.
அந்தப் போராட்டத்தின் போது பல மாணவர்கள் உயிர்த்தியாகம் செய்ததுடன், பின்னர் பெங்காலி மொழி தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி, மொழி உரிமைகளுக்காகச் செய்யப்பட்ட அந்த அர்ப்பணிப்பை நினைவுகூரும் வகையில், 1999 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ அமைப்பினால் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 21 ஆம் திகதி உலக தாய்மொழி தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இதேவேளை, உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில், இலங்கையர் என்ற அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகத்தின் தாய்மொழியே அந்தச் சமூகத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் மிக முக்கியமான காரணியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மொழி என்பது ஒரு தொடர்பாடல் கருவி மட்டுமல்லாது, ஒரு சமூகத்தின் கலாச்சாரம், விழுமியங்கள் மற்றும் வரலாற்றை முன்னோக்கி கொண்டு செல்லும் அடிப்படை ஊடகமாகவும் அடையாளப்படுத்த முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக தாய்மொழி தினம் இன்று
Reviewed by Vijithan
on
February 21, 2026
Rating:
Reviewed by Vijithan
on
February 21, 2026
Rating:


No comments:
Post a Comment