இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி!
இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக சிறுவர் நோய் நிபுணர்கள் சங்கம் தெரிவிக்கிறது.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க இது குறித்துக் கூறுகையில், மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில், குழந்தை பிறப்பை எதிர்பார்க்கும் தாய் தனது உயரத்திற்கு ஏற்ற எடையை முறையாகப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றார்.
"ஆரோக்கியமான பெண் குழந்தையிலிருந்தே ஆரோக்கியமான தாய் உருவாகிறாள். ஏனெனில், 12-14 வயது முதல், பூப்படைந்த நாள் தொடக்கம் அந்தப் பிள்ளை ஆரோக்கியமான நிலையில் இருப்பது மிகவும் முக்கியமாகும். நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்க்குப் பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன. சரியான எடை மற்றும் அந்த எடைக்கு ஏற்ற உயரத்தைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பமடைவதே இதற்கான அடிப்படை அடித்தளமாக இருக்க வேண்டும்."
"போலிக் அமிலம் (Folic acid) குறைந்தால் முதுகெலும்பில் குறைபாடுகள் ஏற்படலாம். தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சில பலவீனங்கள் ஏற்படலாம். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியும் போதே, குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சியடைந்து முடிந்துவிடும். அந்த நேரத்தில் போலிக் அமிலத்தை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாகத் திருமணமாகி குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர் அந்தப் போலிக் அமிலத்தை முறையாகப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். ஏனெனில் ஆரம்பம் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும்" எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Reviewed by Vijithan
on
March 04, 2026
Rating:


No comments:
Post a Comment