மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க நடவடிக்கை-பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டு , குறிப்பாக விவசாயம் மற்றும் மீனவர்களுக்கு தடையின்றி எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்(17) காலை மாவட்டச் செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மனோகரன் பிரதிப் ஏற்பாட்டில் பிரதி அமைச்சர் உபாலி அமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் ,பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், திணைக்களத் தலைவர்கள் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் மற்றும் அரச நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறித்த கலந்துரையாடலை தொடர்ந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் எரி பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் தடையின்றி சகலருக்கும் எரிபொருளை வழங்க விசேட கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மன்னார் பகுதியில் மீன்பிடி பருவகாலம் ஆரம்பித்துள்ளதால், மீனவர்களுக்கு தேவையான எரிபொருளை தடையின்றி வழங்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இதற்காக விசேட பொறிமுறை ஒன்று மீன்பிடி அதிகாரிகளால் உருவாக்கப்பட்டுள்ளது, பெரும்போக அறுவடை பணிகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதால், விவசாயிகளுக்குத் தேவையான எரிபொருளை விவசாயப் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்கு தட்டுப்பாடின்றி எரிபொருளை வழங்க முன்னுரிமை அளிக்கப்படும்.இந்தியாவிலிருந்து அண்மையில் ஒரு எரிபொருள் கப்பல் வந்துள்ளதால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நான்கு கப்பல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.கடந்த காலங்களில் எரிபொருள் விநியோகத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அரசியல் தலையீடுகள் தவிர்க்க இம்முறை கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விநியோக நடவடிக்கைகளைச் சரியாக முன்னெடுக்க பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவர்.மன்னார் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையாமல் கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்டது.என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
Reviewed by Vijithan
on
March 17, 2026
Rating:


No comments:
Post a Comment