சில்லறை விற்பனையை தவிர்த்த அரிசி வர்த்தகர்களுக்கு வழக்கு
அரிசியைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு, அதனைச் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய மறுத்த சில வர்த்தகர்களுக்கு எதிராக மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைமையகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவினரால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, இன்று (29) காலை கிருலப்பனை பொதுச் சந்தை தொகுதியில் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பண்டிகைக் காலத்தில் அரிசி மற்றும் அத்தியாவசிய உணவுகள் தொடர்பாக நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தொடர்ச்சியான சோதனைகளும், பிரதேச மட்டத்திலான விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு கட்டமாகவே இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சில்லறை விற்பனைக்கான வர்த்தக உரிமத்தைப் பெற்றுக்கொண்டு, அரிசியைப் பதுக்கி வைத்து உணவகங்களுக்கு மாத்திரம் விற்பனை செய்து வந்தமை இதன்போது கண்டறியப்பட்டது.
இந்தச் சோதனை நடவடிக்கையின் போது, கடை உரிமையாளருக்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொருட்களைக் கையிருப்பில் வைத்துக்கொண்டு விற்பனை செய்ய மறுப்பது மற்றும் அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை வர்த்தகர்களிடம் கோரியுள்ளது.
Reviewed by Vijithan
on
March 29, 2026
Rating:


No comments:
Post a Comment