பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி விநியோகம்
புத்தாண்டு காலத்தில் சந்தையில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கோழி இறைச்சியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடியால் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கும் அபாயம் காணப்பட்டபோதிலும், அதனை 1,250 ரூபாய் விலையில் பேணுவதற்கு திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
அதேவேளை, உலக சந்தையில் விலங்கு தீவனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட இலங்கை விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர,
"ஏப்ரல் மாதமாகும் போது அனைத்து பண்ணைகளும் தமது அதிகபட்ச கொள்ளளவிற்கு உற்பத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும். தட்டுப்பாடின்றி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதே எமது முயற்சியாக இருந்தது. ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டினால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளன.
அந்தச் செலவை நாம் சுமக்க வேண்டியுள்ளது. எனவே, கோழி இறைச்சிக்கான கேள்வி அதிகரிக்கும் போது, அதற்கேற்ப விநியோகிக்க முடியுமா என்பதைப் பொறுத்தே விலை மாற்றமடையும். விலையை நாங்களல்ல, சந்தையே தீர்மானிக்கிறது.
விநியோகத்தை தட்டுப்பாடின்றி வழங்கவே நாம் எதிர்பார்க்கிறோம், ஏனெனில் தட்டுப்பாடு ஏற்பட்டால் விலை உயர்வு போன்ற நிலைமைகள் உருவாகலாம். திடீரென டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால், வருங்கால நிலைமை குறித்து எம்மால் எதுவும் கூற முடியாது." என்றார்.
பண்டிகை காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி விநியோகம்
Reviewed by Vijithan
on
March 28, 2026
Rating:
Reviewed by Vijithan
on
March 28, 2026
Rating:


No comments:
Post a Comment