NDB வங்கி நிதி மோசடி வழக்கில் நான்காவது சந்தேக நபர் கைது
NDB வங்கியில் இடம்பெற்ற பாரிய உள்ளக நிதி மோசடி தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறை நான்காவது சந்தேக நபரை கைது செய்துள்ளது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் மேலும் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த வங்கியில் 13.2 பில்லியன் ரூபா முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கு விசாரணையை, தற்போது சிஐடியின் கணினி குற்றப் பிரிவு முன்னெடுத்து வருகின்றது.
முக்கிய சந்தேக நபர், பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுகள் துறையில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, 33, 34, மற்றும் 35 வயதுடைய முதல் மூன்று சந்தேக நபர்கள், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதம் 14 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் இந்தச் சம்பவத்தினால் எந்தவொரு வாடிக்கையாளரின் கணக்குகளுக்கோ அல்லது வைப்புகளுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் வங்கியின் அனைத்துச் சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் NDB வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் தெரிவித்திருப்பதாவது,
“வங்கியின் குறிப்பிட்ட ஒரு செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த இந்த மோசடியுடன் தொடர்புடைய ஊழியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் உடனடியாகப் பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சாட்சியங்கள் மற்றும் அறிக்கைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரிவு பலத்த கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் உட்புறக் கட்டுப்பாடு, அறிக்கையிடல் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புக்கள் மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
மிக மோசமான சூழ்நிலையைக் கருதினாலும்கூட, இந்தச் சம்பவத்தினால் ஏற்படக்கூடிய நட்டம் 2026 மார்ச் 31 உடன் முடிவடையும் காலாண்டில் சுமார் 4.0 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், வங்கியின் நிதி நிலைமை ஸ்திரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் வங்கி 11 பில்லியன் ரூபா நிகர லாபத்தை ஈட்டியுள்ளதுடன், 2026 மார்ச் 31 அளவில் வங்கியின் மொத்த சொத்து தளமானது 990 பில்லியன் ரூபாவாகும்.
இச்சம்பவம் குறித்து இலங்கை மத்திய வங்கிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான ஒழுங்குமுறை மேற்பார்வைகளும் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
ஒழுங்குமுறை அறிவுறுத்தல்களின்படி, 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி வழங்கப்படவிருந்த பண ஈவுத்தொகை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனினும்,
பங்குகளை ஈவுத்தொகையாக வழங்கும் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படும்.
இச்சம்பவம் குறித்து சுயாதீனமான தடயவியல் கணக்காய்வு ஒன்றை மேற்கொள்வதற்காக சுயாதீன புலனாய்வு நிபுணர் ஒருவரை நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ள வங்கி, உறுதிப்படுத்தப்படாத தகவல்கள், வதந்திகள் அல்லது ஊகங்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
Reviewed by Vijithan
on
April 08, 2026
Rating:


No comments:
Post a Comment