மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் இறுதி கிரியைகள் இன்று (20) பிற்பகல் பொலிஸ் மரியாதையுடன் பொரளை பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
நாட்டின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய சி.டி. விக்ரமரத்ன, தமது 63வது வயதில் உயிரிழந்தார்.
1986ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் சேவை இடைநிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
பின்னர் 2020ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் திகதி அவர் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
2023ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி அவர் ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பல சந்தர்ப்பங்களில் சேவை நீடிப்பு வழங்கப்பட்டதன் காரணமாக, சி.டி. விக்ரமரத்ன மேலும் சுமார் 8 மாதங்கள் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.
அவர் 2023ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதியே பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.
இதற்கிடையில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், தமது பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியாலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சி.டி. விக்ரமரத்னவின் சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கிழக்கு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடல் பாகங்களை அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தன்னைத்தானே சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியும் அரச பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளுக்கு அமைவாக, அன்னாரின் மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
மறைந்த சி.டி.விக்ரமரத்னவின் இறுதி கிரியை இன்று
Reviewed by Vijithan
on
July 20, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 20, 2026
Rating:


No comments:
Post a Comment