லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!
சுற்றுலா விசாக்கள் மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று வேலை பெறலாம் எனக் கூறி, சில நபர்கள் மற்றும் முகவர்கள் இலங்கை மக்களிடம் பெருந்தொகை பணம் வசூலிப்பதாகப் புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கையிலுள்ள லிதுவேனியா குடியரசின் கௌரவ கொன்சலேட் அலுவலகம் எச்சரித்துள்ளது.
சுற்றுலா விசா மூலம் லிதுவேனியாவிற்குச் சென்று அங்கு சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ள கொன்சலேட் அலுவலகம், இவ்வாறான போலிப் வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சட்டப்பூர்வமாக வேலை வாய்ப்பைப் பெற முடியாது
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை எதிர்பார்க்கும் இலங்கையர்கள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட முகவராண்மைகள் ஊடாக மட்டுமே சட்டப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கொன்சலேட் பணிப்பாளர் காஞ்சன கொடிதுவக்கு, புதுடில்லியிலுள்ள லிதுவேனியா தூதரகத்தின் உத்தியோகபூர்வ வழிகாட்டல்களின்படி கொன்சலேட் அலுவலகம் செயற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லிதுவேனியாவில் உயர்கல்வி, சட்டப்பூர்வ வேலைவாய்ப்பு அல்லது பிற சட்டபூர்வ திட்டங்களைத் தேடும் இலங்கையர்களுக்குச் சரியான வழியைக் காட்டத் தயாராக இருப்பதாகவும், பொதுமக்கள் எந்தவொரு பணத்தையும் செலுத்துவதற்கு முன்னர் அதிகாரப்பூர்வ இணையத்தளம் மற்றும் சமூக ஊடகப் பக்கங்கள் ஊடாகத் தகவல்களை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Reviewed by Vijithan
on
July 16, 2026
Rating:


No comments:
Post a Comment