கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனாவினால் அமைதியின்மை
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஏற்படுத்திய அமைதியின்மை காரணமாக, அரச அதிகாரிகள் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) காலை இந்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கருணநாதன் இளங்குமரன், இராமநாதன் அர்ச்சுனா, பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், திணைக்கள அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்வி, சுகாதாரம், வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டதுடன், விவசாயத் துறை தொடர்பாகவும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதன் போது, கிளிநொச்சி திருவையாறு பகுதியில் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட விவசாயச் செய்கையில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டினார்.
குறித்த விடயம் தொடர்பில் கடுமையான விமர்சனக் கருத்துக்களை முன்வைத்த பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளை மிக மோசமாக விமர்சித்தமையால் கூட்டத்தில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன் காரணமாக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிகாரிகள் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
அதிகாரிகள் இவ்வாறு பாதியிலேயே வெளியேறியதால், குறித்த அபிவிருத்திக் குழுக் கூட்டம் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனாவினால் அமைதியின்மை
Reviewed by Vijithan
on
July 16, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 16, 2026
Rating:


No comments:
Post a Comment