அண்மைய செய்திகள்

recent
-

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

 சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா சிவராசா அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களுக்கு மத்தியில், அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி ஹட்டனில் இன்று (20) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 

ஹட்டன், மல்லியப்பூ சந்தியில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் இந்த அமைதிவழிப் போராட்டம் இடம்பெற்றது.

 

இலங்கை இந்து இயக்க மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

 

சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்த சிவராசா அனோஜன், சமூக ஊடகத்தில் இஸ்லாம் மார்க்கம் மற்றும் நபிகள் நாயகம் தொடர்பில் அவதூறானதாகக் கருதப்பட்ட கருத்தொன்றைப் பதிவிட்டதாகக் கூறப்படும் நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.

 

இந்த வழக்கில் அவருக்கு ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மூன்று மில்லியன் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

எனினும், மேல்முறையீட்டிற்குப் பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது சட்டத்தரணி தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இருப்பினும், மரண தண்டனை தொடர்பான உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வத் தீர்ப்பு தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

அதேவேளை, ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் சவுதி அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்து இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

 

இதனிடையே, சிவராசா அனோஜனை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டனில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

 

வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் அந்நாடுகளின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

 

மேலும், சிவராசா அனோஜன் தனது கருத்துக்காக மன்னிப்புக்கோரியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினரும் மன்னிப்புக் கோரி வருவதாகவும் குறிப்பிட்ட அவர்கள், மனிதாபிமான அடிப்படையில் சவுதி அரசாங்கம் இந்த விடயத்தைப் பரிசீலித்து அவருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

 

இலங்கை அரசாங்கம் உடனடியாக இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுத்து, சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான அனைத்துச் சட்ட மற்றும் இராஜதந்திர வாய்ப்புகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதே இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரதான கோரிக்கையாகும்.






அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்! Reviewed by Vijithan on September 20, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.