மன்னாரில் காணாமல் போன மாணவர்கள் ஆயுததாரிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுவிப்பு!
மன்னார் சிறிய குருமடத்தில் இருந்து கற்று வரும் 19 வயதான அருளானந்தம் ஜொகன்சன் மற்றும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 18 வயதான கிறேசியன் றொமல்சன் ஆகிய இரண்டு மாணவர்களும் பாடசாலை முடிவடைந்த நிலையில் தமது வீடுகளை நோக்கி வந்துள்ளனர்.
எனினும் நீண்ட நேரமாகியும் இருவரும் தங்களின் வீடுகளுக்குச் செல்லவில்லை. இந்த நிலையில் சிறிய குருமடத்தில் இருந்து கற்று வரும் மாணவன் அருளானந்தம் ஜொகன்சன் மடத்திற்கு வராதது தொடர்பாக குருமட முதல்வர் அருட்தந்தை சேவியர் குரூஸ் அடிகளார் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதேவேளை மற்றைய மாணவனின் தாயாரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தனது மகன் காணாமல் போனது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இரண்டு மாணவர்களும் நேற்ற இரவு மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் கள்ளிக்கட்டைக் காட்டுப்பகுதியில் வாகனமொன்றில் கொண்டுவரப்பட்டு ஆயுததாரிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விட்டுச் செல்லப்பட்டுள்ளனர்.
பின் இரண்டு மாணவர்களும் கடும் காயங்களுக்கு மத்தியில் பிறிதொரு வாகனத்தின் உதவியுடன் மன்னாரிற்கு வந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இவர்கள் இருவரும் பொலிஸாரின் பாதுகாப்புடன் மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த மாணவர்களின் கடத்தல் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் பல சோதனைச் சாவடிகள் இருக்கின்ற போதும் மாணவர்கள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு பின் பிறிதொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டு விடப்பட்ட சம்பவம் மன்னார் மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது.
மன்னாரில் காணாமல் போன மாணவர்கள் ஆயுததாரிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் விடுவிப்பு!
Reviewed by NEWMANNAR
on
January 19, 2011
Rating:

No comments:
Post a Comment