மன்னாரில் நாவலர் விழா (பட இணைப்பு) _

சைவமும், தமிழும் பட்டொளி வீச நந்திக்கொடிகள் பறந்த காட்சி கண்களை ஒருபுறம் கவர, மறுபுறமோ அழகுற வளைந்தோடும் நதியைப் போல அடியார்களின் திருப்பவனி பாதைகளை நிறைத்த காட்சி மனமெங்கும் வியாபித்தது.
முருகன் சன்னதி சகிதம் நகரின் மையப்பகுதியில் அழகுற உறைந்தருள்கின்ற ஞான வைரவர் ஆலயத்தில் அன்று விடியற்கருக்கலிலேயே பக்திச்சலசலப்பு! பளபளக்கும் கரையோடும் ஆடைகளும், சிவச்சின்னங்களும் ஆதவனுக்கு முன்பாகவே அப்பகுதியை வெளிச்சமாக்கியது..
இங்கிருந்து பல்லக்கில் ஆரோகணிக்கும் நாவலர் பெருமான் பிரதான விதிகளில் இறங்கி, தமிழ்த்தொண்டின் சின்னமாக நகர்வலமேகி, சித்தி விநாயகர் இந்து தேசியப்பாடசாலையை சென்றடைவதே ஏற்பாடு. மாவட்டத்தின் சகல இடங்களிலும் இருந்து அறநெறிப்பாடசாலைச் சிறார்களும், அறங்காவலர்களும், அடியவர்பெருமக்களும் வந்து குவிந்துகொண்டிருந்தனர். பிரகார கிருத்தியங்களை முடித்துக்கொண்டு, பக்தர்கள் நெஞ்சுருகி தோளில் தாங்க, பார்ப்போர் கண்கள் பரவசமாகும்படி பவனியை தொடர்ந்தார் நாவலர் பெருமான்.
பெருமானின் சேவையை சிரமேற்ற தொண்டர்களும், வழிநடத்திய.பெருமானின் சேவையை சிரமேற்கொண்ட தொண்டர்களும், பவனியை வழிநடத்திய செம்மல்களும், விழாவை நெறிப்படுத்திய அறங்காவலர்களும் புடைசூழ , சாட்ஷாத் நாவலரே விண்ணிறங்கி அடி வைத்து நடப்பது போலிருந்தது இந்த நகர்வலக் காட்சி! கடைகளும், வீதிகளும், நெரிசல்களும் சிலமணிநேரம் ஸ்தம்பித்து, பரவி வந்த பாசுரங்களில் லயித்தன. கம்பீரமான தேசியப்பாடசாலையாம் சித்தி விநாயகர் இந்துக்கல்லுர்ரியை வந்தடைந்த நாவலர்பெருமான் கும்ப சமேத தீபாராதனையுடன் வரவேற்கப்பட்டார்.
கடலில் கலக்கும் முடிவற்ற நதியைப்போல நுழையும் பவனியை உள்வாங்க திணறியது வாயில். சமயக்காவலர் சூழ அரச அதிபர் ஏற்றிய நந்திக்கொடியை ரசித்துவிட்டு மண்டபத்துள் பிரவேசித்த பெருமானை மங்கல வாத்தியங்கள் சுரங்களில் தாங்கிச் சென்று மேடையில் அமர்த்தின. நாற்காலிகள் நிறைந்தன, மண்டபம் திக்குமுக்காடியது, உயிர்பெற்றது விழா!
அடுத்த மணிநேரங்கள் இந்திரலோகமானது. தமிழும், சைவமும் அந்த மகானின் தோளில் இளைப்பாறிய வரலாறுகளை சுவைபட விருந்தாக்கினார்கள் சான்றோர்கள்.
கருத்தையும், கண்ணையும் போட்டியிட்டுப் பறித்தார்கள் கலைஞர்கள். சமயத்தொண்டில் தன்னையே தொலைத்தவர்கள் கண்கலங்க வைத்தார்கள்; விருதுகளும் பெற்றார்கள்.
என்னே, அற்புத விழா ..! மன்னார்வாழ் சைவப்பெருமக்களின் ஞானப்பசியை அறிந்து, அவ்வப்போது விருந்தளிக்கின்ற தாயின் சேவையிது .. மனமாரப்பாராட்டுகிறோம் .. சைவத்தொண்டர்களே , வாழி நீடு ..!
-முத்து
குறிப்பு
அன்பான எம் உறவுகளே உங்களின் கிராமத்தில் நடைபெறும் செய்திகள்//காலாச்சார நிகழ்வுகள் /தேவாலய ,கோவில் திருவிழாக்கள் /பாடசாலை நிகழ்வுகள் / மற்றும் அனைத்து நிகழ்வுகளையும் எம் இணையத்தினூடாக பகிர்து கொள்ள ஆவலாக உள்ளீர்கலா உடனே எங்களுக்கு உங்களிடம் இருக்கும் காணொளிகள்,புகைப்படங்கள்'ஒலிப்பதிவுகள் மற்றும் செய்திகளை எமக்கு அனுப்பிவையுங்கள் உங்கள் செய்திகள் தரமாயின் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க நாம் காத்திருக்கின்றோம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி- newmannar@gmail.com
மன்னாரில் நாவலர் விழா (பட இணைப்பு) _
Reviewed by Admin
on
January 05, 2012
Rating:

No comments:
Post a Comment