அண்மைய செய்திகள்

recent
-

முள்ளிக்குளம் கிராம மக்கள் காடுகளுக்குள் மரத்தடியில் மீள் குடியேற்றம்_படங்கள் இணைப்பு

 மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் இடம் பெயர்ந்த நிலையில் 5 வருடங்களின் பின் மீண்டும் தமது முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக நேற்று வெள்ளிக்கிழமை மதியம் மீள் குடியேறியுள்ளனர்.

கடந்த யுத்தத்தின் போது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்துக் கிராம மக்களும் இடம் பெயர்ந்து சென்றனர்.



பின் யுத்தம் முடிவடைந்த நிலையில் 2009 ஆம்,2010 ஆம் ஆண்டுகளில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள அனைத்து மக்களும் மீள் குடியேற்றப்பட்டனர்.

ஆனால் முள்ளிக்குளம் கிராம மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த மக்கள் மன்னார்,பேசாலை,தலைமன்னார்,தாழ்வுபாடுகீரி,மடுக்கரை,நானாட்டான் ,சிலாபத்துறை ஆகிய இடங்களில் உறவினர்களுடைய வீடுகளிலும்,வாடகை வீடுகளிலும் கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வந்தனர்.

இதன் போது இந்த மக்கள் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கும்,அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வந்தனர்.

தமது மீள் குடியேற்றம் தொடர்பில் குறித்த மக்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டதோடு ஆர்ப்பாட்டங்கள் ,கண்டனப்பேரணிகள் போன்றவற்றை மேற்கொண்ட போதும் எதுவித பலனும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இம்மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் பல்வேறு பட்ட உயர் மட்டங்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.





அண்மையில் முள்ளிக்குளம் கிராம மக்களுடன் இடம் பெற்ற கலந்துரையாடலின் போது மன்னார் மாவட்ட மேலதிக செயலாளரால் முள்;ளிக்குளம் கிராம மக்கள் முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய பகுதிகளில் எந்த நேரமும் மீள் குடியேற முடியும் என அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை முதற்கட்டமாக 80 குடும்பங்களைச் சேர்ந்த 120 பேர் பேருந்து ஒன்றின் மூலம் முள்ளிக்குளம் கிராமத்திற்குச் சென்றனர்.

பின்னர் அப்பகுதியில் உள்ள கடற்படையினரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக அம்மக்கள் முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய மலங்காடு மற்றும் பெரிய குளம் ஆகிய கிராமங்களில் தற்காலிகமாக குடியேறினர்.

இந்த மக்கள் தாம் கொண்டு சென்ற சில பொருட்களை வைத்து காடுகளுக்கு மத்தியில் குடியமர்ந்துள்ளனர்.

இவர்களது குடியேற்றத்தின் போது மன்னார் தோட்டவெளி பங்குத்தந்தை அருட்தந்தை நேரு, சிலாபத்துறை பங்குத்தந்தை இராச நாயகம்,தேசிய மீனவர் ஒத்துழைப்புப் பேரவையின் மன்னார் மாவட்ட திட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் ஆகியோர் சென்று அம்மக்களுக்கான உதவிகளை மேற்கொண்டனர்.

தற்போது குறித்த மக்கள் அடர்ந்த காடுகளுக்குள் மரத்தடியில் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

இம்மக்களுக்கான உதவிகள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை.

இம்மக்களுக்கான அவசர உதவிகளான மலசல கூடவசதி;,குடி நீர் மற்றும் காடு அழித்தல் போன்றவற்றை அப்பகுதியில் உள்ள கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காட்டுப் பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதே சமயம் முள்ளிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயத்தினுள் மக்களை வழிபாடுகளில் ஈடுபட கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளதோடு முள்ளிக்குளம் கடலில் தொழில் செய்யவும் கடற்படையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மக்களை முள்ளிக்குளம் கிராமத்தினுள் செல்ல கடற்படையினர் தடை விதித்துள்ளனர்.அப்பகுதியை அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தற்போது இந்த மக்கள் எவ்வித உதவிகள்,அடிப்படைத் தேவைகள் எவையும் இன்றி வாழ்ந்து வரும் நிலையில் முசலி பிரதேச செயலாளர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளும் தம்மை வந்து பார்க்கவில்லை என அம்மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தாங்கள் கொண்டு சென்ற உணவுப் பொருட்களை மட்டுமே அந்த மக்கள் சமைத்து உண்ணுகின்றனர்.

ஏனைய 320 குடும்பங்கள் இன்னும் சில தினங்களில் குறித்த கிராமங்களுக்குச் சென்று மீள் குடியேறவுள்ளனர்.

தற்போது குறித்த கிராமங்களில் உள்ள காடுகளில் பாலைப்பழம்,மற்றும் வீரப் பழம் அதிகம் காணப்படுவதனால் அம்மக்கள் அதனை மகிழ்ச்சியுடன் சுவைத்தமையினையும் காணக்கூடியதாக இருந்தது. 
___



முள்ளிக்குளம் கிராம மக்கள் காடுகளுக்குள் மரத்தடியில் மீள் குடியேற்றம்_படங்கள் இணைப்பு Reviewed by Admin on June 17, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.