மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளை மீட்டுத்தரக்கோரி மகஜர் கையளிப்பு
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளையும் வீடுகளையும் மீட்டுத்தருமாறு கோரி தேசிய மீனவ ஒத்துளைப்புப்பேரவை நேற்று புதன்கிழமை காலை மன்னார் பிரதேசச் செயலாளரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாக தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அ.சுனேஸ்.சோசை தெரிவித்தார்.
குறித்த மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,,
கடந்த 1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பள்ளிமுனை மக்களாகிய இவர்கள் இடம்பெயர்ந்து மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவை மற்றும் இந்தியா பேன்ற இடங்களில் அகதி வாழ்கை வாழ்ந்தனர். பின்னர் 1991 தொடக்கம் 1994ஆம் ஆண்டுக் காலப் பகுதிக்குள் அவர்களுடைய சொந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தார்கள்.
இற்றைக்கு 23வருடங்கள் இவர்களின் வீடுகள் காணிகள் எல்லாவற்றையும் இராணுவத்தினர் காவல் துறையினர் தற்போது கடற்படையினர் தம் வசப்படுத்திவைத்துக் கொண்டு மக்களை அங்கும்மிங்குமாக அலை மோதவைத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று மக்கள் சொல்லொண்ணாதுயரப்பட்டு கொண்டு நண்பர்கள் வீடுகளிலும் உறவினர்கள் வீடுகளிலும் தனியார் வீடுகளிலும் பல்வேறுபட்ட துன்ப துயரங்களோடு வாழ்ந்து வருவதை கண்ணால் பார்க்கக் கூடியதாக உள்ளது.
ஆனாலும் நாங்கள் மக்களின் காணிகளை அபகரிக்கவில்லை என இன்றைய அரசாங்கம் சொல்லுகின்றது. இதைபார்க்கும் போது அரசினுடைய உண்மைதன்மை எந்தளவிற்கு உள்ளது என அறியமுடியும்.
இந்தவிடயம் தொடர்பாக பல முறைகளில் இவர்களை எமது நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆயர் மூலமாகவும் சில உரிமை சார்ந்த நிறுவனங்கள் மூலமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரச பாதுகாப்பு படை மேலதிகாரிகளின் கூற்றுப்படி பாதுகாப்பு காரணங்களுக்காக
இவ் இடத்தினை தரமுடியாது என மக்களுக்கு கூறப்பட்டது.
தற்போது 2009ஆம் ஆண்டுயுத்தம் முடிவிற்கு வந்தது. அரசாங்கம் நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழலாம் எனவும் தங்களின் காணிகளில் குடியமரலாம் எனவும் எல்லா மக்களையும் தங்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தி விட்டோம் என கூறுகின்ற விடயம் எந்தளவிற்கு உண்மையான விடயம் என அறியக் கூடியதாக உள்ளது. இருந்தும் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வீணாகிபோய் கொண்டு இருக்கின்றது.
கடைசியாக சென்ற வருடம் எமது ஆயர் மூலமாக மன்னார் பொலிஸாரை தொடர்பு கொண்டு பொலிஸாரை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
கடந்தவருடம் 5ஆம் மாதம் 10ஆம் திகதி பொலிஸார் மக்களின் கரங்களில் வீடுகளைகையளிக்க இருக்கையில் கடற்கடையினர் அதற்குமறுப்பு தெரிவித்துவிட்டனர். மக்களின் வீடுகளை உள்ளே சென்று பார்வையிடுவதற்கு அனுமதிமறுக்கப்பட்டது.
ஆரம்பகாலத்தில் நாங்கள் வாடகை பெற்றுள்ளோம். இருந்தும் கடற்படை எப்போது எமது வீடுகளை கைப்பற்றினார்களோ அன்று தொடக்கம் இன்று வரைக்கும் நாங்கள் வாடகைவாங்கவும் இல்லை வாங்கவும் மாட்டோம் என உறுதி மொழியோடு கூற விரும்புகின்றோம். எமது வீடு, காணி எமக்கு உடனடியாக தரப்படவேண்டும்.
இதுவே எமது கோரிக்கையும் வேண்டுகோளும்.
பிரதேசசெயலாளர் அவர்களே!
இவர்களும்; இலங்கைபிரஜைகள் என்று சொல்லப்படுவதற்கு இவர்களிடம்; உள்ளது தேசிய அடையாள அட்டையும் பிறப்பு சான்றிதழ் மட்டுமே ஆகும்.
இவர்கள் சொந்த கிராமத்தில் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே எமது உன்னதமான விருப்பமாகும். இவர்களது அயல் கிராமங்கள் அனைத்தும் மீள் குடியேற்றப்பட்டநிலையில் இவர்கள் மட்டும் அரசால் புறக்கணிக்கப்பட்டது ஏன்?
இங்குவாழும் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் அனைவரும் மன நோயாளிகளாக மாறிவிடுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தாது நிம்மதியான சுபீட்சகரமான வாழ்கையினை இந்தமக்கள் தங்களின் பூர்வீகமான கிராமத்திலும் தங்களின் வீடுகளிலும் வாழ்வதற்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கு உயர்மட்ட அரசாங்க பிரதிநிதிகளிடம் கூறிநிற்கின்றோம்.
இவர்களும்; இலங்கை நாட்டின் பிரஜைகளா? அப்படியாயின் உயர் மட்ட அரசாங்க பிரதிநிதிகளிடம் மக்களாகிய நாங்கள் முன்வைக்கும் இக் கோரிக்கையினை ஏற்று வெகு விரைவில் எமது மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் சொந்த கிராமத்தில் குடியமர துணை செய்ய வேண்டி இம் மனுவினை மக்கள் சார்பாக உங்களிடம் ஒப்படைக்கின்றோம்.
என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள் மன்னார் ஆயர் உட்பட பலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளை மீட்டுத்தரக்கோரி மகஜர் கையளிப்பு
Reviewed by NEWMANNAR
on
January 31, 2013
Rating:

No comments:
Post a Comment