காணிகளை கோரி மன்னார் மக்கள் வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு
கடற்படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை தம்மிடம் மீள ஒப்படைக்குமாறு கோரி வழக்குத்தாக்கல் செய்யப் போவதாக மன்னார், பள்ளிமுனை மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட நீதிமன்றத்திலேயே வழக்குத் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அந்த மக்களின் சட்டத்தரணி இன்று தெரிவித்தார்.
வழக்குத் தாக்கல் செய்யப் போவது தொடர்பிலான நோட்டீஸ் பள்ளிமுனை கடற்படை முகாம் அதிகாரி, இலங்கை கடற்படை தளபதி, பாதுகாப்புச் செயலாளர், மன்னார் மாவட்டச் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோருக்கு சட்டத்தரணியூடாக கடந்தவாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பள்ளிமுனை கடற்கரையோர கிராமத்தில் வீடுகள் அமைந்திருந்த சுமார் 100 ஏக்கர் பரப்பளவான காணியை பாதுகாப்புக் காரணம் காட்டி யுத்த காலத்தில் பொலிஸார் முகாம் அமைத்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தார்கள்.
பொலிஸார் கடந்த வருடம் மே மாதம் அளவில் குறித்த காணியை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், கடற்படையினர் அதற்கு இடமளிக்காமல் அங்கு தமது சிறிய கடற்படை முகாம்களை அமைத்துள்ளதை தொடர்ந்தே வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் சட்டத்தரணி தெரிவித்தார்.
பள்ளிமுனை மக்கள் தங்கள் காணிகளை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், அரசாங்க அதிபர் மற்றும் ஜனாதிபதிக்கும் முன்னர் முறைப்பாடு செய்திருந்தபோதிலும் காணிகள் ஒப்படைக்கப்படாத காரணத்தினால் தற்போது வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
காணிகளை கோரி மன்னார் மக்கள் வழக்குத் தாக்கல் செய்ய முஸ்தீபு
Reviewed by NEWMANNAR
on
February 15, 2013
Rating:

No comments:
Post a Comment