போர்குற்ற ஆவணப்படத்தால் கண்ணீர் குளமானது ஜெனீவா
குறித்த ஆவணப்படத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த பன்னாட்டு இராஜதந்திரிகள் நெஞ்சை நெகிழவைக்கும் காட்சிகளால் கண்கலங்கினர். இதனால் ஐ.நா. சபை கண்ணீர்க் குளமானது. அதேவேளை, மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் மக்கள் படும் அவலங்களை ஆவணப்படத்தின் ஊடாகப் பார்வையிட்ட இராஜதந்திரிகள் சிலர், சோகம் தாங்க முடியாததால் அறையிலிருந்து வெளியே சென்றனர். இலங்கை அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி "மோதல் தவிர்ப்பு வலயம்' என்ற போர்க்குற்ற ஆவணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தின் 23ஆம் அறையில் காண்பிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மேற்கொண்டிருந்தன. மனித உரிமைசெயற்பாட்டாளர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கள் வகிக்கும் உறுப்பு நாடுகளின் இராஜதந்திரிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு "நோ பயர் ஷோன்' ஆவணப்படம் நேற்று காண்பிக்கப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
குறித்த ஆவணப்படத்தின் தயாரிப்பாளரான கலும் மக்கரே இதன்போது விசேட விளக்கமளிப்பொன்றையும் மேற்கொண்டார். குறித்த ஆவணப்படத்தில் இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் குறிப்பாக மோதல் தவிர்ப்பு வலயத்துக்குள் இலங்கைப் படையினர் நடத்திய தாக்குதல்கள், இதனால் ஏற்பட்ட இழப்புகள் என்பன உட்பட முக்கிய சில காட்சிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தளபதிகளுள் ஒருவரான கேணல் ரமேஷிடம் இலங்கைப்படையினர் விசாரணை நடத்துவதையும், அதன் பின்னர் சுட்டுக் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் சித்திரிக்கும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகனான பாலச்சந்திரன் இராணுவத்திரிடம் சரணடைந்த பின்னரே கொல்லப்பட்டுள்ளார் என்பதைக் காண்பிக்கும் காட்சிகளும் ஆதாரங்களுடன் ஆவணப்படத்தில் வழங்கப்பட்டுள்ளன.
அந்தக் காட்சி ஒளிபரப்பாகியபோது அவையில் இருந்த பிரதிநிதிகள் கதிகலங்கிப் போனார்கள். குறித்த காட்சியைப் பார்வையிட்ட பின்னர் கவலை தாங்காது வெளியேறியவர்கள் உள்ளே என்ன நடந்தது என்பதைக்கூட சொல்லமுடியாத அளவுக்கு சக்தியற்றவர்களாகக் காணப்பட்டனர். மேலும் பிணக் குவியல்களை படையினர் உழவு இயந்திரத்தில் ஏற்றுவதையும் மக்கள் சூழவுள்ள பகுதிகளில் இராணுவத்தின் பல்குழல் நடத்தப்படுவதையும் காண்பிக்கும் காட்சிகள் "மோதல் தவிர்ப்பு வலயம்' உள்ளடக்கப்பட்டுள்ளன.
"மோதல் தவிர்ப்பு வலயம்' ஆவணப் படத்தில் வரும் சாட்சிகளை இலங்கை நிராகரித்திருந்தாலும் அதைத் தொழில்நுட்ப ரீதியாக அரசு நிரூபிக்கவில்லை. எனவே, இந்தப் படத்தைப் பார்வையிட்ட பின்னர் இலங்கைக்கு சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடிகள் ஏற்படும் என இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
போர்குற்ற ஆவணப்படத்தால் கண்ணீர் குளமானது ஜெனீவா
Reviewed by Admin
on
March 02, 2013
Rating:

No comments:
Post a Comment