மன்னார் மாவட்டத்தில் 07 வகையான கடற்தொழில் உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை-சித்திரை 1 ஆம் திகதி முதல் அமுலில்
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குவரும் வகையில் 7 வகையான கடற்றொழில் உபகரணங்களை பயன்படுத்திய மீன்பிடி முறையை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்டுவருவது தொடர்பில் அவசரக் கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் நூர் முஹமட் முகம்மது ஆலம் தெரிவித்தார்.
ஏற்கெனவே தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் பாவனையிலிருக்கும் டைனமெட், தங்கூசி வலை, சுருக்கு வலை, மொக்தி வலை, நாய் வலை, தள்ளு வலை, இழுவை வலை ஆகிய 7 வகையான கடற்றொழில் உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடும் மீன்பிடி முறைகளே தடைசெய்யப்படவுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து இந்த 7 வகையான மீன்பிடி முறைகளும் தடைசெய்யப்படும்.
ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் இவ்வாறு தடைசெய்யப்படும் மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
மேற்படி தீர்மானம் தொடர்பில் பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் மற்றும் கடற்றொழில் அமைச்சுக்கும் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கடற்றொழில் உதவிப் பணிப்பாளர் மேற்கொண்டுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் நூர் முஹமட் முகம்மது ஆலம் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளர் எஸ்.மெரான்டா தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் 07 வகையான கடற்தொழில் உபகரணங்களை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை-சித்திரை 1 ஆம் திகதி முதல் அமுலில்
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:

No comments:
Post a Comment