பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டுகோள்
மன்னார், பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளையும் வீடுகளையும் மீட்டுத் தருமாறு கோரி அந்த மக்கள் மன்னார் பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர், உயர் அதிகாரிகளிடம் பல தடவைகள் கவனத்திற்கு கொண்டுவந்தபோதிலும், உரிய அதிகாரிகள் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மன்னார் நகரசபை உறுப்பினர்களான இரட்னசிங்கம் குமரேஸ் மற்றும் மெரினஸ் பெரேராவும் அதிருப்தி தெரிவித்துள்னர்.
இது தொடர்பில் அவர்கள் இன்று திங்கட்கிழமை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'1990ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பள்ளிமுனை மக்களாகிய இவர்கள் இடம்பெயர்ந்து மடு, விடத்தல்தீவு, இலுப்பக்கடவை பகுதிகளிலும் மற்றும் இந்தியாவிலும் அகதி வாழ்க்கை வாழ்ந்தனர்.
பின்னர் 1991ஆம் ஆண்டு தொடக்கம் 1994ஆம் ஆண்டு காலப்பகுதியினுள் அவர்களுடைய சொந்தக் கிராமத்திற்கு மீண்டும் வந்தார்கள். இவர்கள் வந்தபோதும் தங்களுக்கு உரிய காணி, வீடுகள் கிடைக்கவில்லை.
சுமார் 23 வருடங்கள் இவர்களின் வீடுகள், காணிகள் எல்லாவற்றையும் இராணுவத்தினர், காவல்த்துறையினர் தற்போது கடற்படையினர் தம்வசப்படுத்தி வைத்துக்கொண்டு மக்களை அங்கும்மிங்குமாக அலைமோத வைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று மக்கள் சொல்லொண்ணாத் துயரப்பட்டுக் கொண்டு நண்பர்கள் வீடுகளிலும் உறவினர்கள் வீடுகளிலும் தனியார் வீடுகளிலும் பல்வேறுபட்ட துன்ப துயரங்களோடு வாழ்ந்து வருவதை கண்ணால் பார்க்கக்கூடியதாக உள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பல முறைகளில் இவர்களை எமது நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த ஆயர் மூலமாகவும் சில உரிமை சார்ந்த நிறுவனங்கள் மூலமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டும் அரசாங்க பாதுகாப்புப் படை மேலதிகாரிகளின் கூற்றுப்படி பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த இடத்தினை தரமுடியாது என மக்களுக்கு கூறப்பட்டது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவிற்கு வந்தது. அரசாங்கம் நாட்டு மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழலாம் எனவும் தங்களின் காணிகளில் குடியமரலாம் எனவும் எல்லா மக்களையும் தங்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தி விட்டோம் எனக் கூறுகின்ற விடயம் எந்தளவிற்கு உண்மையான விடயம் என அறியக் கூடியதாக உள்ளது. இருந்தும் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வீணாகிப்போய்க் கொண்டு இருக்கின்றது.
கடைசியாக சென்ற வருடம் எமது ஆயர் மூலமாக மன்னார் பொலிஸாரை தொடர்பு கொண்டு பொலிஸாரை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
கடந்த வருடம் 5ஆம் மாதம் 10ஆம் திகதி பொலிஸார் மக்களின் கரங்களில் வீடுகளைக் கையளிக்க இருக்கையில் கடற்படையினர் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர்.
மக்களின் வீடுகளை உள்ளே சென்று பார்வையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டம் உடனடியாக கடற்படையினரிடம் இருந்து மீட்கப்பட்டு மக்களிடம் கையளிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அல்லாது போனால் இதற்கு எதிராக நாம் எதிர்ப்பு போராட்டங்களை நடத்த நேரிடும்' என்றனர்.
பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களின் காணிகளை உடனடியாக கையளிக்க வேண்டுகோள்
Reviewed by Admin
on
March 05, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment