மாந்தை கிழக்கு மக்களின் மணல் அகழும் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
குறித்த பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் அவசர கலந்துரையாடல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை மாந்தை கிழக்கு பிரதேசசபையில் அதன் தலைவர் தலைமையில் இடம் பெற்றது. இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம்,பிரதேச சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போதே அப்பகுதி மக்கள் தமது பிரச்சினைகளை முன் வைத்தனர். தற்போது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம் பெற்று வரும் இந்திய வீட்டுத்திட்டத்திற்கு மணல் மண்ணை பெற்றுக்கொள்ளுவதில் அந்த மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு இராணுவத்தின் தாக்குதல்களுக்கும் உள்ளாகுவதாக தெரிவித்துள்ளனர். மாந்தை கிழக்கு பிரதேச செயலாளரினால் மணல் மண் அகழ்வதாற்கான அனுமதிகள் வழங்கப்படுகின்ற போதும் மண் அகழ்கின்ற இடத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இராணுவத்தின் காவலரனுக்குச் சென்று அனுமதியை பெற்ற பின்பு மண் அகழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும் இராணுவம் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும்,சில நேரங்களில் மண் அள்ளச் செல்லும் உழவு இயந்திரங்களின் உரிமையாளர்கள் இராணுவத்தினால் கடுமையாக தாக்கப்படுவதாகவும் அந்த மக்கன்தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் குறித்த உழவு இயந்திரங்களை இராணுவத்தினர் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவும் வழங்கப்படாது விட்டால் இராணுவத்தினரால் தாக்கப்படுவதாகவும்அந்த மக்கள் தெரிவித்துள்ளதோடு இதற்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக குறித்த பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு இராணுவம்,பொலிஸ்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் மக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை மாவட்டச் செயலகத்திற்கு அழைத்து இப்பிரச்சினைக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாந்தை கிழக்கு மக்களின் மணல் அகழும் பிரச்சினைக்கு தீர்வு காண கோரிக்கை
Reviewed by Admin
on
May 01, 2013
Rating:
No comments:
Post a Comment