வடக்கின் முதலமைர்சர் யார்?மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ,,,,
அறிவிக்கப்பட்டுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது தொடர்பில் கூட்டமைப்புக்குள் பலத்த வாதப்பிரதிவாதங்கள் காணப்படுவதோடு, கால அட்டவணையில் சந்திப்புகளும் தொடர்கின்றன.
இந்நிலையில் முதலமைச்சராக நிறுத்தப்பட வேண்டியவரின் தகுதிகள் பற்றி பலரும் பலவித கோணங்களில் பேசுகின்றனர்.
அறிக்கைகள் விடுகின்றனர். குறிப்பாக சட்ட ஆளுமை பற்றியும், ஆங்கில மொழிப்புலமை பற்றியும் முன்னிறுத்தி பேசுகின்றனர். சட்ட நுணுக்கங்கள் தெரிந்த ஒருவரே தேவையெனவும் வலியுறுத்துகின்றனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பை சட்டரீதியாக வழி நடத்துவதற்கு தமிழ் உணர்வுமிக்க சட்டத்தரணிகளை உள்ளடக்கிய சட்டப்பிரிவு உருவாக்கப்பட வேண்டும்.
இப்படி உருவாக்கும் போது, சட்ட அறிவை வெளியிலிருந்து இறக்குமதி செய்யும் நிலை தோன்றாது. இதேவேளை இலங்கையில் ஆங்கில மொழிப்புலமையையும், சட்ட அறிவையும் தேவைக்கு அதிகமாகவே தன்னகத்தே வைத்திருந்த லக்ஸ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோரின் மொழிப்புலமையும், சட்ட அறிவும் யாருக்கு பயன்பட்டது? அவர்களது மொழிப்புலமையும் சட்ட அறிவும் தமிழ் இனத்தை வாழ வைத்ததா? அவர்கள் நின்று இயங்கிய தளம் தான் எது?
கடந்த 60 வருடங்களுக்கும் மேலான தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான சாத்வீக மற்றும் ஆயுத போராட்டங்கள் முடக்கப்பட்டதன் பின்னர், தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு இருக்கக்கூடிய ஒரே வழி சாத்வீக போராட்டங்களை விரிவுபடுத்துவது தான்.
எனவே இத்தகைய சாத்வீக போராட்டங்களை நடத்துவதற்கு இன்றிருக்கக்கூடிய அரசியல் தலைமைகளை ஒருங்கிணைத்து செல்வதற்கு தமிழ் தேசிய செயல்பாட்டில் நீண்டகால அரசியல் வரலாற்று பாரம்பரியத்தைக்கொண்ட ஒருவரே, வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுதல் வேண்டும்.
இதுவே இங்குள்ள ஒவ்வொரு தமிழர்களதும் பேரவாவாகும். கூட்டமைப்பின் தலைமையானது, ஜனநாயக ஆயுத போராட்டங்களின் வழி வந்தவர்களை ஒருங்கிணைத்து அரவணைத்து ஜனநாயக களத்தில் சமராடக்கூடிய ஒருவரையே வடக்கின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் ஆணை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மொழிப்புலமை மற்றும் சட்ட அறிவை விடவும், வாழ்வுரிமை போராட்டங்கள் நடக்கும் போது வானதிர கர்ஜ்ஜிக்கும் ஒருவரே வடக்குக்கு அவசியத்தேவையாகும்.
இப்படியான கொள்கையை, ஓர்மத்தை ஒருங்கே கைவரப்பெற்ற ஒருவருக்கு ஒரு சட்டவாக்க குழுவையும், நிர்வாக முகாமைத்துவத்துக்காக ஒரு சிந்தனை குழாமையும் ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும்.
தமிழர்கள் இன்னும் பலம் பெற்று எழுச்சி பெற்று விடுவார்கள். சட்டம் மற்றும் மொழியை யார் வேண்டுமானாலும், யாருக்கும் கற்றுக்கொடுத்து விட்டுப்போகலாம். ஆனால் தேசிய உணர்வை கற்றுக்கொடுக்க முடியாது. அது இயல்பாகவே இரத்தத்தில் கலந்திருக்க வேண்டும்.
எனவே பிறப்பிலேயே தமிழ் உணர்வும், இனப்பற்றும் சிந்தனையில் இரண்டறக்கலந்து புரையோடிக்கிடக்கும் ஒருவரே வடக்கின் முதலமைச்சராக வருவதே சாலச்சிறந்ததாகும். கூட்டமைப்பின் வடக்கு தேர்தல் வெற்றியானது அபிவிருத்தி என்பதற்கு அப்பால் வடகிழக்கு இணைப்புக்கான அங்கீகாரமாக கருதப்பட்டு, ஜனநாயக போராட்டங்களை விரைவுபடுத்துவதற்கான களம் திறப்பதற்கு ஏதுவாக அமையும்.
அரசியல், ஜனநாயகம், போராட்டம், சர்வதேசம் என்று அனைத்து இயங்குதளத்திலும் நின்று பணி செய்யக்கூடிய பன்முக ஆளுமை கொண்ட ஒருவரே இதற்கு பொருத்தமானவராவார்.
புரட்சியை யாரும் ஏற்றுமதி இறக்குமதி செய்ய முடியாது. அது எங்கு தேவையோ அந்தந்த தளங்களிலிருந்து பிறப்பெடுக்க வேண்டும்.
வடக்கின் ஒவ்வொரு பிடி மண்ணிலும் தனது மூச்சை வைத்திருப்பவரே, எமது மண் ஒரு அங்குலம் அளவு தானும் ஆக்கிரமிக்கப்பட்டால் தனது மூச்சை அக்னி மூச்சாக்கி சுட்டெரிப்பார். வடகிழக்கு இணைப்புக்கான போராட்ட களங்களை திறக்கும் ஒருவரையே தமிழ் மக்கள் முதலமைச்சராக முடி சூட்டி அழகு பார்க்க விரும்புகின்றனர்.
ஐயோ என்று அபயக்குரலெழுப்பும் போது, மறுகணமே சத்தம் வந்த திசையை நோக்கி ஓடிவந்து துயர்களையும் இந்த மக்களதும் மண்ணினதும் வாழ்வியலோடு கலந்த ஒருவரே வடக்கின் முதலமைச்சராவது இன்னும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இதற்கு அப்பால்பட்டவர்களால் வலிகாமம், கொக்கிளாய், முறிகண்டி, முள்ளிக்குளம், பாரதிபுரம், மக்களின் வலியை அறிய முடியுமே தவிர, அதனை உணர முடியாது. இந்த அடிப்படை ஜதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும் வடக்கு முதலமைச்சர் தெரிவு பற்றி தெளிவு ஏற்பட்டுவிடும்.
ஜனநாயகத்தன்மை மிக்க முடிவென்பது பெரும்பான்மையானவர்களின் கருத்துகள் ஆலோசனைகளை உள்ளடக்கி பகுப்பாய்வு செய்து நீண்ட காலத்திலும், குறுங்காலத்திலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தரக்கூடிய நேரெதிரான பெறுபேறுகளை முற்கணிப்பு செய்து எடுக்கப்படும் முடிவுகளே, கூட்டுத்தீர்மானத்தில் ஜனநாயக வலிமை கொண்டதாக அமையும் என தொழில்முறை வல்லுநர்கள் விளக்கம் கூறுகின்றனர்.
இங்கோ ஒரு இனத்தினுடைய வாழ்வுரிமையில் பெரும் கரிசனையும், அக்கறையும் கொண்டுள்ள பெருமளவிலானோரின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு தனிநபர்களின் ஒருதலைப்பட்ச விருப்புகள் மேலோங்கும் போது, கூட்டணி தர்மம் மீறப்படுகின்றது. சர்வாதிகார போக்குக்கான வடிகாலாகவும் இதுவே அமைகின்றது.
விவாதித்து விட்டு முடிவெடுத்தல் என்பதற்கு மாறாக, தாம் ஏற்கனவே தனித்து எடுத்த முடிவை ஏனையவர்கள் மீது வலிந்து திணிக்க முயல்வது ஜனநாயக பண்புகளை பிரதிபலிக்கும் ஒரு தலைவருக்கு அழகாகாது.
எனவே கைவசம் இருக்கின்ற காலத்தை கவனத்தில் கொண்டு, இதுநாள் வரை கூறப்பட்டுவரும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளினதும், தலைவர்களினதும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் உறுப்பினர்களதும், ஊடக நண்பர்களதும், பெரும்பான்மையான மக்களதும் கருத்துகளை விரைந்து உள்ளீர்த்து இன்றைய கூட்டத்தில் முதலமைச்சர் தொடர்பில் இறுதி முடிவை எடுத்து மக்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றி, வாக்கு பலத்தை அதிகரிக்கச்செய்து தமிழர்களின் இலக்குகளை அடைவதற்கான ஒரு தொடக்கப்புள்ளியாக கருதி வடமாகாணசபை தேர்தலை எதிர்கொண்டு, இமாலய வெற்றியை காணுமாறு சண் மாஸ்டர் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கின் முதலமைர்சர் யார்?மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர்
Reviewed by Admin
on
July 14, 2013
Rating:

No comments:
Post a Comment