படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள்: கெவின் ரூத்
‘‘தற்போதிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்கள் அந்நாட்டில் அகதிகளாக குடியமர்த்தப்படுவதற்கு எதுவித வாய்ப்பும் இல்லை’’ என கெவின் ரூத் அறிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா பிறிஸ்பேர்ன் நகரில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான கொள்கையொன்றுக்கான ஆவணங்களில் பபுவா நியூகினியாவின் பிரதமர் பீற்றர் ஓ நீலுடன் கைச்சாத்திட்டதையடுத்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களது புகலிடக்கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை பபுவா நியூகினியாவிலுள்ள மனுஸ்தீவுக்கும் அந்நாட்டிலுள்ள வேறு இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவார்கள் என கூறிய கெவின் ரூத் அவர்கள் நிஜமான அகதிகள் என கண்டறியப்படும் பட்சத்தில் பபுவா நியூகினியாவில் மீள்குடியமர்த்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவில் சிறந்த வாழ்வைத் தேடி பொருளாதார நோக்கத்துடன் அபாயகரமான படகு பயணத்தை மேற்கொண்டு வருபவர்களை தடுக்கும் முகமாகவே அவுஸ்திரேலியா மேற்படி நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த ஆண்டில் மட்டும் 13,000க்கு மேற்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் படகுகளில் அவுஸ்திரேலியாவை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு படகுகளில் வருபவர்களில் நூற்றுக்கணக்கானோர் பயணத்தின்போது கடலில் மூழ்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை புகலிடக்கோரிக்கையாளர்களுடன் வந்த படகொன்று மூழ்கியதில் 4பேர் பலியானார்கள்
இந்த வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான பிரச்சினை முக்கிய செல்வாக்கை செலுத்தும் ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
படகுகளில் வரும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவில் மீள்குடியமர்த்தப்படமாட்டார்கள்: கெவின் ரூத்
Reviewed by Admin
on
July 20, 2013
Rating:

No comments:
Post a Comment