நுவரெலியாவில் சீதைக்கு கோயில்: இலங்கை அனுமதி
காத்தல் கடவுளான கண்ணனின் பத்து அவதாரங்களின் ஒன்றாக இராமனை இந்துக்கள் வழிப்படுகிறார்கள். இராமன் அவரது மனைவியான சீதையின் சரிதம் கூறுகின்ற இதிகாச புராணமே வால்மீகி எழுதிய இராமாயணமாகும்.
அதில் இலங்கையின் அரசனான இராவணனால் சீதை கவரப்பட்டு இலங்கையின் மலைக்காடுகளில் சிறை வைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட சீதையின் கற்பின் மீது மக்கள் முன்வைத்த சந்தேகத்தை தீர்க்க 'அக்கினிப் பிரவேசம்' செய்த இடம் இலங்கையின் நுவரெலியாவை அண்மித்த பகுதியில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக 'சீதா எலிய' என்கிற பெயரில் கிராமமும் உண்டு.
இந்த நிலையிலேயே சீதைக்கு கோயில் கட்டும் தன்னுடைய விருப்பத்தை அண்மையில் இந்திய மத்திய அரசு இலங்கை அரசிடம் முன்வைத்திருந்தது. அதனை பரிசீலித்த இலங்கை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இராமாயணம் நாயகி சீதையை, இலங்கை அரசன் இராவணன், இலங்கையிலுள்ள அசோக வனத்தில் சிறை வைத்ததாக இராமாயணத்தில் கூறப்படுகிறது. இந்நிலையில், சீதையை மீட்டுச் செல்லும் போது தான் பத்தினி என்பதை நிரூபிப்பதற்காக அக்கினிப் பரீட்சை செய்ததாகக் கூறப்படும் 'திவுரும்பொல' என்ற கிராமத்திலேயே இடத்திலேயே இந்த கோயில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்த கோயில் நிர்மாணம் தொடர்பான பேச்சுவார்த்தையை இந்திய மத்திய அரசாங்கம் கடந்த 2012ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. இந்நிலையில், தென்னிந்திய கட்டடக் கலை நுட்பத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கோயில் தொடர்பான மாதிரியை தயாரிக்குமாறு பெங்களூரைச் சேர்ந்த கட்டடக் கலை நிபுணர் ஒருவருக்கு இவ்வருட ஆரம்பத்தில் இந்திய அரசாங்கம் பணிப்புரை விடுத்தது.
இவர் வழங்கிய மாதிரிகளின் பிரகாரம், தென்னிந்தியாவின் விஜயநகர் சம்பிரதாயங்களுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட மாதிரியொன்றுக்கமைய மேற்படி கோயிலை நிர்மாணிப்பதென தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய பாரிய சிலைகள் கொண்ட மூன்று பகுதிகள், சிற்பக்கலையடங்கிய பாரிய மண்டபம், நீர்த்தடாகம் போன்றன அடங்கிய வகையில் இந்த கோயில் மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் நிர்மாணத்துக்கான இந்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதி இரண்டு கோடியாகும். இது இலங்கை ரூபாப்படி நான்கு கோடியே 36 இலட்சமாகும்.
இலங்கை உல்லாசப் பயணத்துறையானது ஜனாதிபதி மஹிந்த ரரிஜபக்ஷவின் உத்தரவுக்கிணங்க கடந்த 2007ஆம் ஆண்டில் ஒரு வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்தது. அதாவது, இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கையின் புராதன இடங்கள் தொடர்பில் கண்டறிந்து அவற்றை உல்லாசப் பயணப் பிரதேசங்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் பிரகடனப்படுத்துவதேயாகும்.
இதன்மூலம் இந்திய உல்லாசப் பயணிகளின் வருகையை அதிகளவில் இலங்கை உள்வாங்க முடியும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகக் காணப்படுகிறது. இந்நிலையிலேயே, இந்தியா தனது கோரிக்கையை இலங்கையிடம் முன்வைத்தது. அதற்கான அனுமதியினையும் இலங்கை வழங்கிவிட்டது.
இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கையின் புராதன இடங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாகவிருந்த இலங்கை உல்லாசப் பயணத்துறையின் ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ஸ்ரீநிவாசன் கலைச்செல்வம், இது தொடர்பில் கூறியுள்ளதாவது,
'இராமாயணத்துடன் தொடர்புள்ளதாகக் கருதப்படும் பல இடங்கள் இலங்கை அரசின் சுற்றுலாத்துறையால், இந்தியாவில் பிரபலப்படுத்த முயற்சிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்டன. இதன் பலனாக இந்தியாவிலிருந்து இந்த இடங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
இராவணன் சிவபெருமானை வழிபட்டதாகக் கருதப்படும் திருகோணேஸ்வரம் கோயில், சீதை சிறை வைக்கப்பட்டிருந்ததாகக் கருதப்படும் இடம், ஹனுமான் சஞ்சீவி பர்வதத்திலிருந்து, போரில் காயம்பட்ட லக்ஷ்மனனைக் காப்பாற்ற மூலிகைகளை கொண்டு வந்தபோது இலங்கையின் ஐந்து இடங்களில் அந்த மூலிகைச் செடிகள் சிந்தியதாகக் கருதப்படும் இடங்கள் ஆகியவை இது போல சுற்றுலாத்துறையால் பிரபலப்படுத்தப்பட்டன' என்றார்.
இது இவ்வாறாயின், இலங்கையின் புராதனமான இடங்களில் கட்டடங்கள் கட்டினால், அதன் சிறப்புக்கள் அழியும் நிலை ஏற்படும். எனவே, இங்கு சீதைக்கு கோயில் கட்டக்கூடாது' என இலங்கையின் வரலாற்று நிபுணர்கள் ஒரு புறத்தில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன், 'இராவணா பலய' என்ற பௌத்த மத அமைப்பு, 'இராவணன் இலங்கையை ஆண்டதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, முதலில் இராவணனை கௌரவிக்க வேண்டும். இங்கு கட்டப்படும் சீதை கோயிலுக்கு முன்பு இராவணனுக்கு சிலை வைக்க வேண்டும்' எனவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியாவில் சீதைக்கு கோயில்: இலங்கை அனுமதி
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment